ETV Bharat / state

"2024 தேர்தல் ஒரு கொள்கை யுத்தம்" - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

author img

By

Published : Mar 5, 2023, 12:02 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல என்றும் அது ஒரு கொள்கை யுத்தம் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "உலகில் தலைசிறந்த மனிதர்களை 'மாணிக்கம்' என்பார்கள். 'மனிதகுல மாணிக்கம்' என்று கூட பண்பு நிறைந்த மனிதர்களை அழைத்துப் போற்றுவார்கள். அந்த வகையில் பிறக்கும் போதே மாணிக்கமாக பிறந்தவர் தான் ப.மாணிக்கம்.

மாமனிதர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாமெல்லாம் பெருமைப்படத்தக்க வகையில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பங்கு எடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன்.

அதிலும், இன்னொரு மனிதகுல மாணிக்கமான நல்லகண்ணு, இந்த மேடையில் நம்மோடு இருக்கிறார். தியாகத்தின் திருவுருவாக இருக்கின்ற இவர்கள் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்குக் கிடைத்து இருக்கக்கூடிய பெருமை. இத்தகைய தீரமிக்க தியாகிகளின் இயக்கம் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளரக் காரணம் அதனுடைய கொள்கைகள் மட்டுமல்ல, இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்களினால் தான். அரசியல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு பாட்டாளிகளுக்காகத் தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை உழைக்கும் தலைவர்களாக இந்தத் தலைவர்கள் அமைந்திருப்பார்கள்.

அத்தகைய மாபெரும் தலைவர்களில் ஒருவர்தான் மாமனிதர் மாணிக்கம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவர் வளர்ந்தாலும், அவருடைய தந்தை பக்கிரிசாமி சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அந்தக் கொள்கையில் அழுத்தமான பற்றுக் கொண்டவர். எனவே, மாணிக்கத்திற்கும் எங்களுக்கும் பூர்வகாலத் தொடர்பு என்பது அமைந்திருக்கிறது.

மிக இளமைக் காலத்திலேயே, போராளியாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் மாணிக்கம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கச் சென்ற போதும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தீவிரமான அரசியலில் அவர் ஈடுபட்டார்.

மாநிலம் முழுவதும் மாணவர்களைத் திரட்டத் தொடங்கினார். அவருடைய செயல்பாடுகளைப் பார்த்து நெல்லை மாவட்டத்தில் இயக்கத்தை வளர்ப்பதற்காக கட்சித் தலைமை அவரை அனுப்பி வைத்தது. தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் பிறந்து, கடலூரில் வளர்ந்து, சிதம்பரத்தில் பயிற்சி பெற்று, திருநெல்வேலியில் கட்சி வளர்த்து, தமிழ்நாடு முழுமைக்குமான 15 ஆண்டு காலம் செயலாளராக இருந்து பணியாற்றியவர் தான் மாணிக்கம். 77 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்றால், அதில் ஐம்பது ஆண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்துக்காகவும், பொதுவுடைமைக் கொள்கைக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்பது, தியாக வரலாறு. தியாகிகளுடைய வரலாறு. அந்தத் தியாக வரலாற்றில் முக்கியமான அத்தியாயம் தான் மறைந்த மாணிக்கமும் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அய்யா நல்லகண்ணுவும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எத்தனையோ சதி வழக்குகள் போடப்பட்டன.

இந்தியாவின் விடுதலைக்காக, மக்களுக்காக புரட்சிகரக் கொள்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அந்த வழக்குகள் போடப்பட்டன. அப்படி கைது செய்யப்பட்ட பல பேர் ஆயுள் தண்டனையையும், தூக்குத் தண்டனையையும், சிறைச்சாலை சித்திரவதைகளையும் அனுபவித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்த்து புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மதவாத, வகுப்புவாத எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும். இதனை என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு நான் குறிப்பிட்டுச் சொன்னேன். தமிழ்நாட்டைப் போன்ற ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால்தான் வெற்றி பெற முடியும்.

வெறும் கையிலே முழம் போடக் கூடாது என்பார்கள். எனவே, ஒற்றுமைக் கரங்கள் சேராமல் வெற்றிக் கனியை நாம் பறிக்க முடியாது. 2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. அது ஒரு கொள்கை யுத்தம். அந்த கொள்கை யுத்தத்திற்கு வியூகம் வகுப்பது ஒருபக்கம் என்றால் அதற்கான படைவீரர்களை உருவாக்குவது இன்னொரு பக்கம். இன்று நம்முடைய இயக்கங்களை நோக்கி ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு கொள்கைப் பயிற்சி அளிக்க வேண்டும். மார்க்சிய கொள்கை வகுப்புகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

'மார்க்சின் கொள்கைகள் பிளவுபடுத்தும் கொள்கை' என்றெல்லாம் இந்தக் காலத்தில் சிலரால் சொல்ல முடிகிறது என்றால் அதற்குத் தக்க பதில் சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. சாதி, மதம், இனம், பணம், பால் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அழைக்கும் 'தோழர்' என்ற ஒற்றைச் சொல்லை விட ஒற்றுமை மருந்து உண்டா? 'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்பதை விட ஒற்றுமை முழக்கம் வேறு இருக்க முடியுமா?. சாதியின் பேரால் மக்களைப் பிரித்த சனாதனத்தின் ஆதரவாளர்கள், மார்க்ஸை பிளவுவாதி என்கிறார்கள் என்றால், மார்க்சிய கருத்தியலை நாடு முழுவதும் விதைக்கும் கடமை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் அனைத்திற்கும் இருக்கிறது.

பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.
இன்று காலையில்கூட பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் ல் நிதீஷ்குமாரிடத்தில் நான் தொலைபேசியில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் ஒருக்காலும் இந்தக் கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்திட முடியாது என்பதை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்" என கூறினார்.

இதையும் படிங்க: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.