ETV Bharat / state

பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. அனைத்து கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:03 AM IST

Updated : Aug 23, 2023, 11:22 AM IST

பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடித
பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் அனைத்து நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தும் பொருட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

CM Morning Meals Scheme

சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்" – என்று பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறு மகாகவியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று ஆகஸ்ட் 22 கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த ஜூலை 27 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயன் அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி, கடந்த ஜூன் 7 அன்று ஆணை வெளியிடப்பட்டதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்த சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வருகிற ஆகஸ்ட் 25 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் புதுமைல்கல்!

Last Updated :Aug 23, 2023, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.