ETV Bharat / state

கோயில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழகம் முழுவதும் ஆகமங்களை பின்பற்றாமல் கோயில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ள மொட்டை கோபுரத்தை, ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகம விதிப்படி கிழக்கு பக்கம் தான் ராஜ கோபுரம் இடம் பெற வேண்டும் எனவும் இந்த கோயிலில் வடக்கு பக்கம் பார்த்து கோபுரம் கட்டப்பட உள்ளதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மீது படையெடுப்புகள் காரணமாக கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பஞ்சரத்ன ஆகமப்படி, எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆகமங்கள் பின்பற்றாமல் கோபுரங்களை கட்ட முடியாது என எதிர்ப்பு தெரிவித்த போது, அரசு அமைத்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க கூடாது என்று நீதிபதிகள் கண்டித்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னோருக்கு தெரியாத ஆகமமா இப்போது உள்ளவர்களுக்கு தெரிகிறது என கேள்வி எழுப்பி அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

1726 ஆம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின் படி சில கோயில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: திருக்கடையூர் கோயிலில் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.