ETV Bharat / state

அரசு வழக்கறிஞர்கள் சம்பளம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 7:02 PM IST

அரசு வழக்கறிஞர் சம்பளம் தொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவு
state-government-advocate-salary-case-mhc-incase-order-not-followed-chief-secretary-will-appear

State Government Advocate Salary Case: அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: கடந்த 2006 முதல் 2011ஆம் அண்டு வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய சம்பளம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாணை வெளியிட்டது குறித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக கொள்கை முடிவெடுத்து, விதிகளை வகுக்க வேண்டியுள்ளதால், மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு பொதுத்துறைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறி, அந்த கடிதத்தை அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் கட்டண பாக்கியை வழங்கக் கோரி வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளைக் கூறி, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம் எழுதியும், அதை அமல்படுத்த அரசு முன்வரவில்லை என அதிருப்தி தெரிவித்தது.

மேலும், நீதிமன்றம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என்றோ, பரிசீலிக்கப்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல், பொதுத்துறை செயலாளர் கோரிக்கையை ஏற்று ஒரு மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த அவகாசத்துக்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து, செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டி வரும் எனவும் என எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முதன்மை அமர்வு நீதிமன்றம் - சிறப்பு நீதிமன்றம் - உயர் நீதிமன்றம் - ஜவ்வாக இழுக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.