ராணி மேரி கல்லூரியை இடிக்க ஜெயலலிதா முயற்சித்தார் - முதலமைச்சர்

author img

By

Published : Nov 22, 2022, 3:44 PM IST

ராணி மேரி கல்லூரியில் மாணவிகள் தங்கி படிக்க விடுதி கட்டப்படும் - முதல்வர் ஸ்டாலின்

'ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார். அப்போது நாங்கள் இடிக்கக்கூடாது என போரிட்டோம்’ என பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை: மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல்நிலை பெற்ற 104 மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

2020-21 மற்றும் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. 3 மொழி துறைகள் (பிரெஞ்சு, உருது, ஹிந்தி ) உட்பட 21 துறைகளில் இளநிலை(UG) பட்டம் முடித்த 2,702 மாணவர்களுக்கும், 15 துறைகளில் முதுநிலை (PG) பட்டம் முடித்த 473 மாணவர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர்(M.Phil) முடித்த 84 மாணவர்களுக்கும் என மொத்தம் 3,259 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். அதிலும் முதல் பட்டம் சிறப்பானது. முதல் தலைமுறையாகப் பட்டம் பெறுவது அதனைக் காட்டிலும் பரவசமானது. உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில்தான் இன்று பட்டம் பெற்ற நீங்கள் ஒவ்வொருவருமே இருக்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வொருவருடைய கண்களிலும் பல எதிர்காலக் கனவுகள் மின்னிக்கொண்டு இருக்கின்றன. உங்களது பட்டங்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும். மேலும், மேலும் படியுங்கள். பாடங்களைப் படிப்பவர்களாக மட்டுமல்ல – பாடங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு, உருவாக்கக்கூடியவர்களாக நீங்கள் உயர வேண்டும். நீங்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆகுங்கள்.

ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா
ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா

1915-ஆம் ஆண்டு "கேப்பர் இல்லம்" என்ற அந்தப் பெயரில் புகழ்பெற்ற அந்தக் கட்டடத்தில் இந்த ராணிமேரி கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்களென்றால், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால், உங்கள் ராணி மேரி கல்லூரிதான்.

இது 104 ஆவது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள்! எத்தனை தலைமுறையினருக்குக் கல்வியை - அறிவை - ஆற்றலை - வேலைவாய்ப்பை - தன்னம்பிக்கையை - வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே தான், இந்த ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது, பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்குலத்திற்கு ஒளிவிளக்கு என்றுதான் சொல்லவேண்டும்!

இந்தக் கல்லூரிக்கு முன்னால், கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கிறது. இது பெண்கல்வியின் கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது.

பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய இந்த பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை, நான் எப்பொழுதும் அப்படி பேசுவதும் கிடையாது.

ஆனால், அன்றைக்கு இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று பொன்முடி சொன்னது போல, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக்கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அதனுடைய உச்ச கட்டமாக, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த வளாகத்திற்குள் உட்கார்ந்து மாணவிகளெல்லாம் ஒரு மிகப்பெரிய உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரக்கூடிய குடிநீர் விநியோகத்தை நிறுத்தியது, கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடையும் போட்டார்கள். கல்லூரியை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளையெல்லாம் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. கோபாலபுரத்திலிருந்து தலைவர் கருணாநிதி எங்களுக்கு சட்டமன்ற கட்சியின் அலுவலகத்திற்குத் தொலைபேசியின் மூலமாக தொடர்புகொண்டு, ஒரு செய்தியைச் சொன்னார். சட்டமன்றம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வருகிற வழியிலே, ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வாருங்கள். உங்களுடைய போராட்டத்திற்கு "திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும்" என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று எங்களுக்கு உத்தரவு போட்டார்.

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும், பொன்முடி அவர்களும், இன்னும் சிலரும் இங்கே வந்தோம். கேட் மூடியிருக்கிறது அப்போது, வாசலில் நிற்கின்ற காவலர்கள், எங்களைப் பார்த்தவுடன் வணக்கம் வைத்து மரியாதையோடு கேட்டை திறந்துவிட்டார்கள். நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும், கேட்டை திறந்துவிட்டார்கள். அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே வருகிறோம். உள்ளே வந்தவுடன் அங்கு கீழே அமர்ந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாணவியர்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மரியாதையோடு தான் கதவை திறந்துவிட்டார்கள்.

அப்படி கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் நாங்கள் சந்தித்தோம். அதிக நேரம் கூட இல்லை, இரண்டு முதல் நான்கு நிமிடங்கள்தான் இருக்கும். தைரியமாக இருங்கள், நல்ல காரியத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள், உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம், கருணாநிதி அவர்கள் எங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார், தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களுக்கு சொல்லிவிட்டு வரச்சொன்னார். எனவே, நாங்கள் ஆதரவு தருவோம், நீங்கள் எதற்கும் கலைப்பட வேண்டாம். ஆனால், அமைதியாகப் போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென்றோம்.

போகிறபோது கூட கேட் மூடியிருந்தது, அப்போதும் கேட்டை திறந்துவிடுகிறார்கள். வந்தபோதும் கேட்டை திறந்துவிட்டார்கள், போகிறபோதும் காவலர்கள் கேட்டை திறந்துவிடுகிறார்கள். வந்து மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்ப வருகிறபோதும், மூடியிருந்த கேட் திறக்கப்படுகிறது, நாங்கள் வெளியில் போகிறோம். இது நடந்தது, பகல் 2.00 மணி அல்லது 2.30 மணி இருக்கும்.

இரவு 12.00 மணிக்கு வேளச்சேரியில் இருக்கிறேன், வேளச்சேரியில் தான் என்னுடைய வீடு. போலீஸ் வந்துவிட்டது. எதற்கு என்று கேட்டேன்? கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? ராணி மேரி கல்லூரியில் போராடிக் கொண்டிருக்கின்ற மாணவிகளையெல்லாம் நீங்கள் சுவர் ஏறிக்குதித்து, கேட் ஏறி குதித்து உள்ளே சென்று போய்விட்டு வந்திருக்கிறீர்கள்.

எதற்காக கைது, வழக்கு எனக்கேட்டால், கேட் ஏறி குதித்தாக வழக்கு; என்னையும், பொன்முடி போன்றவர்களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம். இங்கேகூட கல்லூரி முதல்வர் அவர்கள் துன்பப்பட்டார்கள் என்று சொன்னார்கள், துன்பப்படவில்லை, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்குத் துணைநின்றதற்காக, அதை நினைத்துப் பார்க்கின்றபோது, இது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக என்னைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கிறது.

சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், நான் வாடவில்லை, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தைப்பிடித்த இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் மீண்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இத்தகைய புகழ்பெற்ற இந்த ராணிமேரிக்கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்தப் பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம்.

ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா
ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா

கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால், கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து யாராலும் நீக்கிவிட முடியாது. அது வேறு. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய மனதில் இடம் பிடித்தவர். உங்களது பெயருக்குப்பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல. அது உங்கள் அடிப்படை உரிமை! இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளை பெண்கள் ஆறு பேரும் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிக மிகச் சிறப்பு. மேலும் மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித்தரப்படும்.

’நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ராணி மேரி கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், BFSI (Banking, Financial Services and Insurance) அந்தப் பயிற்சியில் 449 மாணவியர்களும், Logistics-ல் 221 பேரும், பயிற்சி எடுத்துப்பயன் பெற்றிருக்கிறார்கள். பல கல்விக்குழுக்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, காவல்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியும் பேராசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, அதன்மூலம் 948 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான ஊக்கத்தொகையை, ராணி மேரிக்கல்லூரியில் 842 பேர் பெற்று வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி,”நம்முடைய எண்ணமே இருமொழிக் கொள்கை தான். மூன்றாவது மொழியை புகுத்தினால் அது சரியாக இருக்காது. தமிழ்நாட்டில் ஆங்கிலம், தமிழ் என இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். ஏதேதோ புதிய கல்வி திட்டம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 3,8ஆவது வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால் பள்ளி இடைநிற்றல் தான் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி - தமிழக அரசு ஏற்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.