ETV Bharat / state

"எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன" - சிதம்பரம் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 9:50 PM IST

தீட்சிதர்களுக்கு சராமாரியாக கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்களுக்கு சராமாரியாக கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் நடைபெற்று வந்த கட்டுமான பணி தொடர்பாக தமிழ்நாடு அறநிலையத்துறை ஆணையரின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று(டிச. 1) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் கோயில் தீட்சிதர்களுக்கு பல்வேறு கேள்விகள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோயில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படாது என தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(டிச.1) விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழமையான கோயில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

இன்னும் எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை என்பதால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார். வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், "கோயிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியும்?. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன?. தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து அறிக்கை கோரப்படும்.

எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று உத்தரவாதம் அளிக்கிறீர்களா? அல்லது தடை விதிக்கவா? என்று நீதிபதிகள் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோம் என்று தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அறநிலையத் துறை ஆணையர் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுநர், முதல்வரை அழைத்து பேச வேண்டும் - மசோதாக்கள் நிலுவை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.