ETV Bharat / state

வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு வரும் தொற்றுநோய் பாதிப்புகள்.. அரசு கூறும் அறிவுரைகள் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:50 PM IST

Etv Bharat
Etv Bharat

rainy season diseases and prevention: சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீண்டுவரும் நிலையில், தொற்று நோய்கள் பரவுவதை தவிர்ப்பதற்கான அறிவுரைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் தேங்கியதால் இப்பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மோட்டார்கள் மூலம் வெள்ளத்தை அகற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த வெள்ளப் பாதிப்புகளால் ஏற்பட்ட சாக்கடை கழிவுகளால் டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்குப் பிந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறுள்:-

1. மருத்துவ சேவைகள்

  • பொதுமக்கள் அனைவரும் சுகாதார ஆலோசனைகளை மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம்.
  • காயமடைந்த நோயாளிகளுக்கு, மருத்துவ முகாம்களில் டெட்டனஸ் டாக்ஸாய்டு தடுப்பூசி வழங்கப்படும்.
  • சம்ப்கள் / மேல்நிலை தொட்டிகளை தூய்மைப்படுத்த பிளீச்சிங் பவுடர், மருத்துவ முகாம்கள் / நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் பொது சுகாதார பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
  • மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருந்துகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

1. வயிற்றுப்போக்கு. காய்ச்சல் போன்ற நீரினால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

2. பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்:

  • பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • தண்ணீரை காய்ச்சி பருகவேண்டும்.
  • தொற்றுநோயைத் தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் அவசியம்.
  • வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

3 யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ முகாம் அல்லது அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

4. ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டால், அவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவக் குழு மற்றும் பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

5. வதந்திகளை மக்கள் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வெள்ளத்தின் ஒரு தொற்று நோய் பரவல் கூட இல்லை.

6. தனியார் டேங்கர் லாரி, திறந்தவெளி குளங்கள், திறந்த கிணறுகளில் தண்ணீர் சேகரிப்பதை மக்கள் கவனித்தால், வெள்ளம் கலந்த தண்ணீர் பாதுகாப்பானது அல்ல என்பதால், உடனடியாக பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீர்

1. சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

2. மேல்நிலைத் தொட்டிகளில் (OHT) குளோரின் அளவு 2 PPM ஆக இருக்க வேண்டும். தெரு குழாய் / வீட்டு குழாயில் O.5 PPM.

3. வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி / சம்ப்பில் உள்ள தண்ணீரை குளோரினேஷன் செய்ய பின்வரும் விதிகளைப் பின்பற்றவும்:

  • ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கும் குளோரினேட் செய்ய 4 கிராம் 33% ப்ளீச்சிங் பவுடரை ஒரு வாளியில் எடுத்து பேஸ்டாக செய்ய வேண்டும்.
  • வாளியில் 3/4 பங்கு வரை தண்ணீரை மெதுவாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சுண்ணாம்பு மற்றும் பிற வண்டல் படிவதற்கு 10 முதல் 15
  • நிமிடங்கள் காத்திருக்கவும். சூப்பர்நேட்டன்ட் குளோரின் தண்ணீரை மற்றொரு வாளிக்கு மாற்றி, குளோரின் தண்ணீரை மேல்நிலை தொட்டி / சம்ப்பில் கலக்கவும்.
  • மேலே உள்ள குளோரினேஷன் செயல்முறைக்கு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பயன்படுத்தப்படலாம்.

4. உடைந்த பைப் லைன்களை சரி செய்து, ஏதேனும் கழிவுநீரி கசிவு உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

4. வெள்ளத்திற்குப் பிறகு சம்ப்கள் / மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான நடைமுறை

1. ஆழ்துளை கிணறுகள், சம்ப்கள், திறந்தவெளி கிணறுகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே குடிநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும். படிப்படியான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • சம்ப் / மேல்நிலைத் தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.
  • சம்ப் / மேல்நிலை தொட்டியை பிளீச்சிங் பவுடரால் ஸ்க்ரப் செய்து கழுவவும்.
  • நன்கு ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, சம்ப் / மேல்நிலை தொட்டியில் தண்ணீர் நிரப்பலாம்.
  • மேலே விவரிக்கப்பட்டபடி தண்ணீரை குளோரினேட் செய்ய வேண்டும்.
  • அசுத்தங்களை வெளியேற்ற அனைத்து குழாய்களிலும் தண்ணீர் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு வெளியேற்றவும்.

2. அதேபோல், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் குளோரினேஷன் செய்ய வேண்டும்.

5. தற்காலிக தங்குமிடங்களில் சுகாதார நடவடிக்கைகள்

  • தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ள மக்கள் முகாமில் வழங்கப்படும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
  • மக்கள் கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டும். தற்காலிக கழிப்பறை வசதி செய்து தருமாறு முகாம் பொறுப்பாளரிடம் கோரிக்கை விடுக்கலாம்.
  • ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு (1:4 விகிதம்) கொண்டு தற்காலிக தங்குமிடங்களை அடிக்கடி கிருமி நீக்கம் செய்தல்.

6. பூச்சிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை மற்றும் அழுகும் பொருட்களை விரைவில் அகற்ற வேண்டும்.
  • இந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

7. கொசு கட்டுப்பாடு

  • டயர்கள், உடைந்த மண் பானைகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் கழிவு கொள்கலன்கள் மற்றும் கட்டுமான இடத்தில் தண்ணீர் தேங்குவது போன்றவை கொசுக்களின் இனப்பெருக்க ஆதாரங்களாக உள்ளன.
  • எனவே, பயன்படுத்தப்படாத கொள்கலன்களை தொடர்ச்சியாக அகற்றவேண்டும்.

8. இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல்

இறந்த விலங்குகள் அல்லது பறவைகள் கண்டறியப்பட்டால் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வந்து ஆழமாக புதைத்து ப்ளீச்சிங் பவுடர் தெளித்து அகற்ற வேண்டும்.

9. வெள்ளத்திற்குப் பிந்தைய தட்டம்மை தடுப்பூசிகள்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய்த் தடுப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு வேறு எந்த தடுப்பூசியும் போடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 4 வார இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

10. உடல்நலப் பிரச்சினைகள் குறித்த கூடுதல் தகவல் மற்றும் உதவிக்கு, மக்கள் 24 மணிநேர சுகாதார உதவி எண் 104'-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.