ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : Apr 23, 2023, 1:41 PM IST

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WEATHER
கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஏப்.23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஏப்.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24, 25, 26ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணைப் பகுதியில் 13 சென்டி மீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறை - நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா 6 சென்டி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம், சின்னக்கல்லார் - காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் தலா 4 சென்டி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெப்பநிலை இருக்கும்போது நேரடியாக வெயிலில் செல்வதால், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும், அதனால் இவர்கள் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் வீட்டுத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 55 பழங்கால சிலைகள்.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.