ETV Bharat / state

இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகளை நேரலையாகப் பார்க்கலாம் - தொடங்கி வைத்த DSP

author img

By

Published : Apr 4, 2023, 3:50 PM IST

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நேரலை
மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நேரலை

மெட்ரோ நிலையங்களில் பெரிய எல்.இ.டி திரையின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளை நேரலை செய்யும் நிகழ்வைத் தொடங்கி வைத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், வெளிநாடுகளில் உள்ள மெட்ரோ நிலையங்களைப்போல இங்கே பராமரிப்புப் பணிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகளை நேரலையாகப் பார்க்கலாம் - தொடங்கி வைத்த DSP

சென்னை: எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ.பி.எல் போட்டிகளை பயணிகள் நேரலையில் பார்க்க வசதியாக பெரிய எல்.இ.டி. திரையை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இன்று திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், மார்க் மெட்ரோ நிறுவனமும் இணைந்து சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகளை LED திரையில் நேரலையில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம், வடபழனி, விம்கோ நகர் உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் எல்.இ.டி. மூலம் ஐ.பி.எல் போட்டிகள் நேரலையில் திரையிடப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ரிப்பன் வெட்டி LED ஸ்கிரினில் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் உடன் இருந்தார்.

இந்த எல்.இ.டி திரையில் சென்னையில் நடைபெறும் போட்டிகள் மட்டும் அல்லாது இந்தத் தொடரின் எல்லா போட்டிகளும் திரையிடப்பட உள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருவருக்குத் தலா 10 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. பயணம் செய்வதற்காக, டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே இதைப் பார்க்க முடியும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், "சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகள் எல்.இ.டி மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. இதைத் தொடங்கி வைக்க வருகை தந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. ஐ.பி.எல் போட்டிகளைப் பயணிகள் பார்த்து மகிழலாம். இந்த ஐ.பி.எல். தொடர் முடியும் வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் போட்டிகள் ஒளிபரப்பப்படும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், "சாமி 2 படம் பண்ணும் போது மெட்ரோ ரயில் என்ற பாடல் பண்ணினேன். இதை விக்ரமும், கீர்த்தி சுரேஷும் பாடினார்கள். இந்த நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சருக்கும், சென்னை மெட்ரோவுக்கும் நன்றி. கிரிக்கெட் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.

கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள் நாம் எல்லோரும். தனியாக அமர்ந்து பார்க்காமல் இதை நண்பர்களோடு அல்லது குரூப்போடு பார்க்கும் போதுதான் கிக்கே. ரொம்ப நாளாக மெட்ரோவில் பயணம் செய்ய எனக்கு ஆசை. ஆனால், என்னுடைய வீடும் ஸ்டுடியோவும் ஒரே இடத்தில் இருப்பதால் வெளியே அதிகமாக நான் பயணம் செய்வதில்லை.

வெளிநாடுகளில் உள்ள மெட்ரோ நிலையங்களைப் போல இங்கே பராமரிப்பு பணிகள் சிறப்பாக உள்ளது. மெட்ரோவை அழகாக பராமரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது எங்காவது போனால் நானும் மெட்ரோவிலேயே போகலாம் எனத் தோன்றுகிறது. மெட்ரோவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். மெட்ரோவில் அதிகளவில் பயணியுங்கள். இது மாசுவைக் குறைக்க உதவும்.

நானே நிறைய இடங்களுக்கு சைக்கிளில் தான் செல்கிறேன். கிரிக்கெட்டில் எனக்கு பெரிய நாலேஜ் இல்லை. யார் நன்றாக விளையாடுகிறார்களோ அதைப் பார்த்து எஞ்சாய் பண்ணுவேன். விளையாட்டில் வெற்றி, தோல்வியைத் தாண்டி நாம் அதில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஐ.பி.எல். தொடக்க நிகழ்ச்சியில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா எல்லாம் என்னுடைய பாடலுக்குதான் ஆடி உள்ளனர். என்னுடைய இசை எல்லா இடத்திலும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என உற்சாகமாக மக்கள் மெட்ரோவை அதிகளவில் பயணிக்க வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிநவீன வசதியுடன் கூடிய உதகை அரசு மருத்துவமனை திறப்பு எப்போது? - அமைச்சர் மா.சு. கூறிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.