கே.கே.நகரில் மரம் சரிந்தது: மழைநீர் வடிகால் பணி காரணமாக விபத்து ? - மேயர் பிரியா விளக்கம்

author img

By

Published : Jun 25, 2022, 12:44 PM IST

கே.கே.நகரில் மரம் சரிந்தது மழைநீர் வடிகால் பணி காரணமாக விபத்து ? - மேயர் பிரியா விளக்கம்

கே.கே.நகரில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது, மழைநீர் வடிகால் பணிகளுக்கும் விபத்திற்கும் தொடர்பில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்தவர் வாணி கபிலன். இவர் கே.கே நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று (ஜூன்.24) மாலை கே.கே நகரிலிருந்து காரில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக காரின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மையான சென்னை என்ற இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தூய்மைக் கண்காட்சி நடைபெற்றது.

மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் குறித்த விளக்கங்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர். தூய்மை விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தூய்மையான சென்னை என்ற இலக்கை அடைய  அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு
தூய்மையான சென்னை என்ற இலக்கை அடைய அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு

மேலும் விழிப்புணர்வு பேரணியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், சென்னையை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்போம் என பொதுமக்களுடன் சேர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, "சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். தூய்மையான சென்னை என்ற இலக்கை அடைய அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது" என தெரிவித்தார்.

மேலும், கே.கே.நகரில் மரம் விழுந்து பெண் மரணமடைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, "மழைநீர் வடிகால் பணி காரணமாக விபத்து ஏற்படவில்லை, விபத்திற்கும் பணிகளுக்கும் தொடர்பில்லை என்றார்.

நான்கு நாட்கள் முன்னதாகவே பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இயற்கையாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாகவே மரம் சரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மழைநீர் வடிகால் பணிகள் தொடக்கத்தில் தான் தாமதமாக நடைபெற்றது.

தற்போது மாநகராட்சியின் தொடர் ஆய்வு காரணமாக பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறினார். நகரில் உள்ள பழமையான மரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது எனவும் பொது இடங்களில் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: யாரோ ஒருவரின் அலட்சியத்தால் பலியான பெண் கவிஞர்... யார் இந்த வாணி கபிலன் ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.