ETV Bharat / state

Special: சென்னை ஐஐடியில் செயற்கை முழங்கால் அறிமுகம்

author img

By

Published : Apr 9, 2022, 2:39 PM IST

Updated : Apr 9, 2022, 7:11 PM IST

"கால்" கொடுக்கும் ஐஐடி- மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
"கால்" கொடுக்கும் ஐஐடி- மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

சென்னை ஐஐடியில் செயற்கை முழங்கால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 160 டிகிரி வரை மடக்கும் வசதி கொண்டது.

சென்னை: விபத்து போன்றவற்றில் காலை இழந்தவர்களுக்கு செயற்கையான கால்கள் பொருத்தப்படுகின்றன. மூட்டுகளுக்கு கீழுள்ள பகுதியை மட்டும் இழந்தவர்களுக்கு இந்த செயற்கைக் கால்கள் ஓரளவு சவுகரியமாக இருக்கலாம். ஆனால் கால்மூட்டியையும் இழந்தவர்கள் செயற்கை மூட்டுகளை மடக்க முடியாது. சமதளத்தில் ஓரளவு சமாளித்து நடக்கும் இவர்கள் படிக்கட்டுகள், பேருந்துகள், வாகனங்கள் போன்றவற்றில் ஏறும் போது அடையும் சங்கடங்கள் சொல்லி மாளாது. இத்தகைய துன்பங்களை போக்கும் வகையில் வெளிநாடுகளில் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய மடங்கும் வகையிலான மூட்டுகளைக் கொண்ட செயற்கைக் கால்கள் புழக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் முதல் முறை: இந்தியாவில் இத்தகைய செயற்கைக் கால் முதன் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிபுணர்கள் இந்த சாதனையை புரிந்துள்ளனர். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த செயற்கை முழங்காலுக்கு ’கதம்’ என பெயரிட்டுள்ளனர். இந்தக் கதம் செயற்கை மூட்டு அறிமுகம் சென்னை ஐஐடியில் நேற்று (ஏப்ரல் 08) நடைபெற்றது. இந்த முழங்காலில் போட்டு பயன்படுத்தி வரும் இரண்டு நபர்களும் தங்களின் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர்.

அறிமுக விழாவில் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி, பேசும்பொழுது “சுகாதாரம் மருத்துவம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக சந்திக்க வேண்டியது எதிர்காலத்திற்கு அவசியமானதாகும். இந்தத் தேவையை நியாயப்படுத்தும் வகையில் 'கதம்' அமைந்துள்ளது. ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் அனைத்தும் மனித குலத்திற்கு பயனளிக்கும் வகையில் தயாரிப்புகளாக மாற்றப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

"கால்" கொடுக்கும் ஐஐடி- மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

விலை குறைவானது: சென்னை ஐஐடி மற்றும் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதனை மேம்பாட்டிற்கான டிடிகே மையத்தின் பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறும்போது, ”உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ’கதம்’ விலை குறைவானது. ஐஎஸ்ஓ தரம் மற்றும் உயர்ந்த செயல் திறன் கொண்டது. முழங்காலுக்குமேல் இழந்தவர்களுக்கு பயன்படும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூட்டு கால்கலை விட 4 முதல் 5 மடங்கு வரை விலை குறைவாகவும் சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழங்காலின் மேல் பகுதி வரை துண்டிக்கப்பட்ட பிறகு எஞ்சி இருக்கும் குறுகிய, நீண்ட மூட்டுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த காலினை பொருத்திக் கொண்டு பேருந்துகளில், ஆட்டோக்களில் ஏறி அமர்ந்து செல்ல முடியும்.

ஏற்கனவே முழங்கால்களை இழந்தவர்கள் கால்களை பொருத்தும் போது தங்களின் இடுப்பு வரை கால்களை தூக்கி வைத்து நடக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் 160 டிகிரி வரை மடக்கி தானாக நடக்க முடியும். பாலிசென்ட்ரிக் 4 கம்பிகளுடன் கூடிய முழங்கால் மூட்டு இருப்பது கூறுபவர்கள் நெகிழ்வுடன் நடப்பதற்கு எளிதாக அமையும்.

5 ஆண்டுகள் வரை இந்தக் கால்களை பயன்படுத்தலாம்: சென்னை ஐஐடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கதம் அதிகம் வலிமை கொண்ட பொருட்களான அலுமினியும் அலாய், எவர் சில்வர் போன்றவற்றால் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது . மிகவும் குறைவான எடையில் 600 கிராம் அளவில் தயார் செய்ய பெற்றுள்ளது. கதம் கருவியை பொறுத்திக் கொள்பவர்களின் நடை வேகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமதளம் மற்றும் படிகள் போன்றவற்றிலும் ஏறி இறங்க முடியும்.

மொபைலிட்டி இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் இதன் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு விரும்பப்படும் பொருட்களை அவர்களை தேர்வு செய்யும் வசதியினை தற்போது உருவாகியுள்ளது. அதனைப் பயன்படுத்தி விரும்புபவர்கள் இதனை பெற்றுக் கொள்ளலாம். கதம் முழங்கால் இழந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.

இருசக்கர வாகனம் கூட ஓட்ட முடிகிறது: முழங்கால் இழந்த கதம் கருவியை பொருத்தி நடந்துவரும் ஹரி கூறும்போது, "ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது. அப்பொழுது முழங்கால்களை இழந்தேன். பின்னர் எனக்கு ஒரு நிறுவனத்தின் மூலம் முழங்கால் பொருத்தப்பட்டது. அதில் எனது கால்களில் புண்கள் ஏற்பட்டன . எனக்குத் தெரிந்த சிலர் கூறியதன் அடிப்படையில் மொபைலிட்டி இந்தியா நிறுவனத்திற்கு சென்று அவர்கள் கொடுத்த கால்களை பயன்படுத்தினேன். அதன்பிறகு ஐஐடியில் தயாரித்து அளிக்கப்பட்ட கதம் பொருத்தப்பட்ட காலை கடந்த ஆறு மாதமாக பயன்படுத்தி வருகிறேன். என்னால் இருசக்கர வாகனம் ஓட்ட போன்றவற்றை ஓட்ட முடிகிறது” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: 'பார்வ கற்பூர தீபமா..' - 'வாவ்' கரூர் கலெக்டருக்குள்ள இப்படி ஒரு திறமையா..!

Last Updated :Apr 9, 2022, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.