குடியரசுத் தலைவர் மாளிகையில் 30 ஆண்டுகள்: காந்தியைக் கண்ட காமாட்சி பாட்டி தேர்தலில் போட்டி

author img

By

Published : Feb 10, 2022, 12:56 PM IST

Updated : Feb 10, 2022, 1:38 PM IST

ராஷ்ட்ரிய பவனில் 30 வருட வாழ்க்கை! காந்தி மவுண்ட்பேட்டனை கண்ட  94 வயதான காமாட்சிப்பாட்டி தேர்தலில் போட்டி..
ராஷ்ட்ரிய பவனில் 30 வருட வாழ்க்கை! காந்தி மவுண்ட்பேட்டனை கண்ட 94 வயதான காமாட்சிப்பாட்டி தேர்தலில் போட்டி.. ()

சென்னை மாநகராட்சித் தேர்தலில் 174ஆவது வார்டில் போட்டியிடும் 94 வயதான காமாட்சிப் பாட்டி குறித்த சிறப்புத் தொகுப்பு. குடியரசுத் தலைவர் மாளிகை, காந்தியைக் கண்ட அனுபவங்கள் எனப் பரவத்துடன் பகிர்ந்துகொள்கிறார் காமாட்சி.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியில் 174ஆவது வார்டில் குடியரசு மாளிகையில் வாழ்ந்த 94 வயது பாட்டி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தங்களின் பகுதிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றவும், பொதுமக்களுக்குச் சேவை செய்ய தனக்கு அரிகேன் விளக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கிறார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சுயேச்சைகளும் தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

ஸ்பார்க் அமைப்பின் சார்பாக சுயேச்சை வேட்பாளர்கள்!

இந்த நிலையில் சென்னை மண்டலம் 13இல் உள்ள பெசன்ட் நகர்ப் பகுதியில் உள்ள வார்டு எண்கள் 173, 174, 179 ஆகியவற்றில் ஸ்பார்க் அமைப்பின் சார்பில் சுயேச்சைகளாக மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் 173ஆவது வார்டில் மீரா ரவிக்குமார் உலக உருண்டை சின்னத்திலும், 174 வார்டில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே குடியரசுத் தலைவர் மாளிகையில் தனது கணவர் சுப்பிரமணியன் பணியின் காரணமாக வாழ்ந்த, 94 வயது பாட்டி காமாட்சி 174ஆவது வார்டில் அரிக்கேன் விளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ராஷ்டரி பவன் டூ நகராட்சித் தேர்தல்

179ஆவது வார்டில் காமாட்சி பாட்டியுடன் இணைந்து சமூகப் பணியில் ஈடுபட்டுவரும் பிரியா ராஜசேகர் வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இது குறித்து 94 வயதில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் காமாட்சி பாட்டி கூறும்போது,

வெற்றிபெற்றால் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

“எனக்குச் சிறிய வயதிலிருந்து அரசியல் ஆர்வம் இருந்தது. பெசன்ட் நகர்ப் பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். மேலும் இந்தப் பகுதியில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

எனவே பொதுமக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய அலுவலர்களை அணுகுவதைவிட நாமே தேர்தலில் நின்று பொதுமக்களுக்குத் தேவையானவற்றைச் செய்யலாம் என்ற நோக்கத்தில் போட்டியிடுகிறேன்.

எனது சிறிய வயதில் அரசியலிலிருந்தவர்கள் தியாகிகளாக வாழ்ந்தனர். ஆனால் தற்பொழுது அதிகளவில் பொதுமக்களுக்காக உழைப்பவர்கள் குறைந்துள்ளனர். தற்பொழுது அவர்களின் அரசியல் நோக்கத்திற்காகப் போட்டியிடுகின்றனர்.

பொதுமக்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டறிந்து அதனை நிறைவேற்ற உள்ளோம். ஸ்பார்க் அமைப்பின் மூலமும், அதில் உள்ள உறுப்பினர்கள் துணையுடன் வெற்றிபெறுவோம். வெற்றிபெற்றால் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வயதானவர்கள் நடந்துசெல்வதற்கும் வசதிகள் செய்து தரப்படும்.

அந்தந்தந்தப் பகுதியில் உள்ளவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய குழு அமைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் 30 ஆண்டு வாழ்க்கை

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். திருமணமான பின்னர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 30 ஆண்டுகள் வாழ்ந்தேன். அதன்மூலம் எனக்கு அதிகளவில் தொடர்புகள் இருக்கின்றன. எனக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறு பேரக் குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் தேர்தலில் நிற்பதை விரும்புகின்றனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தேர்தல் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளேன். 1927ஆம் ஆண்டில் பிறந்தேன். கடந்த காலத்தினைப் பின்னோக்கிப் பார்த்தால் அமைதியான வாழ்க்கை இருக்கிறது.

மவுண்ட்பேட்டன் முதல் நீலம் சஞ்சீவி ரெட்டி காலம் வரை

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மவுண்ட்பேட்டன் காலத்திலிருந்து ஆறாவது குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவி ரெட்டி காலம் 1977ஆம் ஆண்டு வரை இருந்துள்ளேன். மேலும் சுதந்திரப் போராட்டம், மகாத்மா காந்தி போன்றவர்களையும் பார்த்துள்ளேன்.

அந்தக் காலத்தில் அரசியலிலிருந்தவர்கள் தியாகிகளாக இருந்தனர். எனது கணவர் குடியரசு மாளிகையில் துணைச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் தேர்தலில் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

179ஆவது வார்டில் காமாட்சி பாட்டியுடன் இணைந்த சமூகப் பணியில் ஈடுபட்டுவரும் பிரியா ராஜசேகர் வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். காமாட்சிப் பாட்டியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துக் கூறும்போது,

94 வயதிலும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற காமாட்சிப் பாட்டியைப் பார்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம். இவர் எப்போதும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என விரும்புகிறார்.

மேலும் ஸ்பார்க் அமைப்பின் மூலம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறோம். இதனால் தேர்தல் பரப்புரையைக் குழுக்களாக இணைந்து செய்ய உள்ளோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும், வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:டீக்கடையில் பலகாரம் சுட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

Last Updated :Feb 10, 2022, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.