ETV Bharat / state

மேட்ரிமோனியலில் இப்படியும் நடக்குமா..? - நுகர்வோர் நீதிமன்றம் வரை சென்ற நூதன வழக்கு!

author img

By

Published : Jul 15, 2023, 9:49 PM IST

matrimonial-information-sent-details-of-already-married-girl-to-young-man-seeking-groom
Online matrimonial information center groomers to note: This is also happening

வரன் தேட வந்த இளைஞனுக்கு திருமணமான பெண்ணின் புகைப்படத்தையும் விபரத்தையும் அனுப்பிய திருமண தகவல் மையத்தின் தலைவரை கைது செய்யுமாறு தொடரப்பட்ட வழக்கில் திருமண தகவல் மையம் பதிலளிக்க சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : அண்ணாநகரை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது மகன் ஜெய் ஹரி சுதனுக்கு வரன் தேடி கே.எம்.வெட்டிங் ஈவண்ட் என்ற திருமண தகவல் மையத்தில் கடந்த 2016ல் பதிவு செய்தேன். அந்த நிறுவனத்தின் தலைவர் நேரடியாக தகவல் தரும் திட்டத்தின்கீழ் கட்டண தொகை ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தையும் கட்டினேன்.

இந்த நிலையில், அந்த திருமண தகவல் மையத்திலிருந்து எனக்கு பெண்ணின் புகைப்படம் மற்றும் பெண்ணின் விபரங்களுடன் கடந்த 2017 அக்டோபரில் மெயில் வந்துள்ளது. மகனுக்கு வரன் வரும் என்ற மகிழ்ச்சியில் அந்த மெயிலை பார்த்தால் புகைப்படத்தில் இருக்கும்பெண் திருமணமானவர், அவர் கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருபவர் மேலும், எங்கள் குடும்பத்தினருக்கு அந்த பெண்ணின் கணவர் நெருக்கமானவர் என்று தெரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தெரியாமல் நடந்துவிட்டது, வேறு வரன்களின் விபரங்களை தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, திருமண தகவல் மையத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன். எந்த பதிலும் வரவில்லை.

கே.எம்.திருமண தகவல் நிறுவனம் தனது சேவையை சரியாக செய்யவில்லை. திருமணமான பெண்ணின் விபரங்களை தவறாக அனுப்பியது அந்த நிறுவனத்தை நம்பி நல்ல வரன்களுக்காக ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இதுபோன்று சேவை குறைபாடுகளுடன் பொறுப்பில்லாமல் செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த புகார் நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, புகாருக்கு பதிலளித்த திருமண தகவல் மையம், புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் தவறானது. அவரது மகனின் தகவல்களை தவறாக பதிவு செய்துள்ளார். அவரது நோட்டீசுக்கு பதில் அனுப்பினோம். எங்கள் நிறுவனம் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளது. மிக தாமதமாக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட குறைதீர் ஆணையம், மனுதாரருக்கு திருமண தகவல் மையம் மனுதாரர் கொடுத்த கட்டண தொகை 1.8 லட்சம் ரூபாய் மற்றும் சேவை குறைபாடுக்கு 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ.1 லட்சத்து 65,881 தருமாறு கடந்த 2022 டிசம்பரின் உத்தரவிட்டது.

இந்த நிலையில், குறைதீர் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதால், அந்த திருமண தகவல் மையத்தின் தலைவரை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 72ன்கீழ் கைது செய்யக்கோரி வெங்கடராஜு குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.கீர்த்தனா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு திருமண தகவல் மையத்திற்கு உத்தரவிட்ட குறைதீர் மன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க : Momos: மோமோஸ் சாப்பிடுவதில் பந்தயம்... நொடியில் பறிபோன இளைஞரின் உயிர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.