ETV Bharat / state

"புயல் பாதிப்புகளிலிருந்து வெளிவர மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது" - ராஜ்நாத் சிங்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 8:24 PM IST

சென்னையை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்

Central Minister Rajnath Singh: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வான் வழியாகப் பார்வையிட்டார்.

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளை இன்று (டிச.07) ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இந்த வான்வழி பார்வையின் போது தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, "பாதிப்புகளிலிருந்து மீள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்ட படைகள் மாநில அரசுக்கு உதவி வருகிறது. விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பிரதமர் மோடி கவலை அடைந்துள்ளார். இங்கு உள்ள நிலைமையை உன்னிப்பாக அவர் கவனித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அவர் மாநிலப் பேரிடர் மீட்புப் பணிக்கு மத்திய அரசின் இரண்டாவது தவணைப் பங்காக ரூ. 493.60 கோடியை ஆந்திராவுக்கும், ரூ.450 கோடியைத் தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக, சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வடிகால் திட்டத்திற்காக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561.29 கோடி மதிப்பிலான நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மூன்று நாளாக மின்சாரம் இல்லை" - இருளில் தவிக்கும் கொரட்டூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.