ETV Bharat / state

போலிச் சான்றிதழ் விவகாரம்: மருத்துவர்கள், மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

author img

By

Published : Dec 29, 2022, 10:37 PM IST

போலிச் சான்றிதழ் விவகாரம்
போலிச் சான்றிதழ் விவகாரம்

வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போலிச் சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் 73 மருத்துவர்கள், 14 மாநில மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை: கடந்த அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுனில் குப்தா சிபிஐ புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்து இந்தியாவில் மருத்துவர் ஆவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 29) இந்தியா முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 91 இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக 14 மாநில மருத்துவ கவுன்சில் அலுவலகங்களிலும் மற்றும் 73 வெளிநாடு மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் தொடர்பான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்தியாவை பொறுத்தவரை எந்தவொரு வெளிநாட்டில் மருத்துவ பட்டம் முடித்திருந்தாலும், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டுமானால், அவர்கள் தகுதிகாண தேர்ச்சி ஒழுங்குமுறை சட்டம்-2002இன் படி எஃப்எம்ஜிஇ (Foreign Medical Graduates Examination) எனப்படும் வெளிநாடு மருத்துவ பட்டம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2002ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு இத்தகைய மாணவர்கள் இந்தத் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொண்டு மருத்துவர் தொழிலை மேற்கொள்ள முடியும்.

இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மாநில மருத்துவ கவுன்சிலில் உள்ள நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்து போலியாக பதிவு செய்து சான்றிதழ் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த தகுதி தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை மாநில மருத்துவ கவுன்சிலுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையிலேயே மருத்துவர்களுக்கான பதிவு எண் வழங்கப்படும்.

இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் கவனத்துக்கு வராமலேயே சில மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் சிலர் முறைகேடாக தங்களை மாநில மருத்துவ கவுன்சிலில் மட்டும் பதிவு செய்துகொண்டு மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் 73 வெளிநாட்டு மருத்துவம் படித்து முடித்தவர்களுக்கும் 14 மாநில கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்தச் சோதனை நடந்துள்ளது. மதுரை புறநகரைச் சேர்ந்த விக்னேஷ் வெள்ளைக்கண்ணு, ரஷ்யாவில் மருத்துவ முதுகலை படிப்பை 2009-ல் முடித்துள்ளார். இவர் பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2020-ல் மருத்துவராகப் பதிவு செய்துள்ளார். ஆனால், 2018-ல் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வசிக்கும் சீயர்ஸ் சாமுவேல் என்பவர் 2007-ல் ரஷ்யாவில் மருத்துவ முதுகலைப் பட்டம் முடித்து பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2019-ல் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்தக் காரணங்களுக்காக இந்த இருவரது வீடு மற்றும் மருத்துவ நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவ்வாறாக தமிழகம் உள்ளிட்ட 91 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக போலி சான்றிதழ் பெற்றவர்கள் இந்தியாவில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 14 மாநில மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் எத்தனை வெளிநாட்டு மருத்துவம் படித்த நபர்களுக்கு போலீஸ் சான்றிதழ்கள் வழங்கி உள்ளார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.