ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 4:32 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு

Thoothukudi Gun fire: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளம்பெண்ணின் தாய், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய்த் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயதுடைய ஸ்னோலின் என்ற இளம் பெண்ணின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

எதிர்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் இருந்தபோது 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் கங்காபுர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: சீனாவுக்கு பிறகு முதன்முறையாக தமிழகத்தில் கால்பதிக்கும் அடிடாஸ் நிறுவனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.