ETV Bharat / state

பாரிமுனை 4 மாடி கட்டட விபத்து: உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு

author img

By

Published : Apr 19, 2023, 10:56 PM IST

பாரிமுனை 4 மாடி கட்டட விபத்து: உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
பாரிமுனை 4 மாடி கட்டட விபத்து: உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சென்னை பாரிமுனையில் 4 மாடி பழைய கட்டடம் இடிந்த விபத்தில் இதுவரை இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பாரிமுனையில் 4 மாடி பழைய கட்டடம் இடிந்த விபத்தில் இதுவரை இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்

சென்னை: பாரிமுனை மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டடம் அமைந்திருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தை, கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பரத் சந்திரன் என்பவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். இதனையடுத்து கட்டடத்தை புதுப்பிக்கும் பணியும், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 19) காலை வழக்கமான புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காலை 10.15 மணியளவில் திடீரென நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டட விபத்தில் அருகே இருந்த ராஜசேகர், பார்த்திபன், அரசு, முகமது ஆரிப் ஆகிய நான்கு பேரும் காயம் அடைந்தனர். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பாரிமுனை, உயர் நீதிமன்றம் மற்றும் கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில், சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும் ஈடுபட்டனர்.

கட்டட இடிபாடுகளை மாநகராட்சிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் மூலமாக உடைத்தும் அகற்றினர். முதலில் கட்டடத்தின் அருகில் காயமடைந்த நான்கு நபர்களை மீட்புத் துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கட்டடம் விழுந்ததில் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாநகரட்சி மேயர் ப்ரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தீயணைப்புத் துறையின் டிஜிபி அபாஸ் குமார் ஆகியோர் கட்டட விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களைக் கண்டறிய காவல் துறையின் 2 மோப்ப நாய்களும், தீயணைப்புத் துறையின் 5 நாய்களும் வரவழைக்கப்பட்டு, தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதேநேரம், கட்டடத்தின் கீழ் மாட்டிக் கொண்டவர்களை மீட்க Victim identification machine (a) under scan machine என்ற இயந்திரத்தைக் கொண்டு, எந்த பகுதியில் மாட்டியுள்ளனர் என்பதை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பார்த்தனர்.

இதனையடுத்து 48 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கக் கூடிய பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர் பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், “5 துறைகளைச் சேர்ந்த 284 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 30 லாரிகளில் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டட உரிமையாளர் பரத் சந்திரன் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த கட்டட கான்ட்ரக்டர், தொழிலாளர்கள் யார் என்ற முழுமையான விவரம் தெரிய வரும். இதுவரை கட்டட இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவுக்குள் தேடும் பணியானது நிறைவு பெற்றவுடன், முழு விவரம் தெரிய வரும்” என்றனர்.

இந்த நிலையில், கட்டட விபத்து தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் பரத் சந்திரன் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், கட்டடம் மறுசீரமைக்கும்போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Chennai Building Collapse: சென்னையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.