ETV Bharat / state

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை

author img

By

Published : Sep 12, 2022, 6:52 PM IST

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு.. தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு.. தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக வழக்குத்தொடர கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக்கூறி ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், '' ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வாறான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக வழக்குத் தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் அனுமதியளித்து கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இருவருக்கும் வழக்குத்தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன், “சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களே இல்லை.

ராம்குமார் ஆதித்தனின் உறுப்பினர் அட்டை கடந்த ஜூலை 2019ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. எனவே அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்குத்தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து தனி நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் 10ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: அடித்தாடும் ஈபிஎஸ்..! பதுங்கி பாய தயாராகும் ஓபிஎஸ்..! அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.