ETV Bharat / state

விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரம்; மேலும் 4 பேர் மீது சிபிசிஐடி வழக்கு

author img

By

Published : Jun 29, 2023, 5:06 PM IST

Etv Bharat
Etv Bharat

விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் செங்கல்பட்டு சிபிசிஐடி போலீசார் மேலும் நான்கு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்பதும்; மெத்தனால் என்ற விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.

இவ்வாறு முறைகேடாக விற்கப்பட்ட சாராயத்தால் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் சேர்க்கப்பட்டதனை முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் கண்டுபிடித்ததோடு இதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விஷச்சாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய ரசாயன ஆலை உரிமையாளார் இளைய நம்பி உட்பட 17 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், இந்த வழக்கின் தீவிரத் தன்மையை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க விஷச்சாராயம் தொடர்பான மூன்று வழக்குகளையும் (CBCID investigation on Illicit Liquor death in TN) சி.பி.சி.ஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏ.டி.எஸ்.பி மகேஸ்வரி விஷச்சாராய வழக்குகளை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, விஷச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்பட்ட இடம் மற்றும் இதனால், பாதிக்கப்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் நான்கு வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு விஷச்சாராயம் வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாடெங்கும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கைகள் எழும்பின. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 500 அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில் மேலும், சில மதுக்கடைகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய விஷச்சாராயக் கொலை: விரைவில் வெளியாகிறது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.