ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வு முடிவில் 62ஆயிரம் இடங்கள் காலி; 25 கல்லூரியில் ஒரு மாணவரும் சேராத அவலம்

author img

By

Published : Oct 30, 2022, 10:36 PM IST

Etv Bharat
Etv Bharat

446 கல்லூரியில் 25 கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 3 சுற்று முடிந்தபின்னரும் ஒரு மாாணவரும் சேரவில்லை என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்தபின்னர் 62 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் எனவும்; 446 கல்லூரியில் 25 கல்லூரியில் 3 சுற்று முடிந்தபின்னரும் ஒரு மாணவரும் சேரவில்லை எனவும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், 3 கல்லூரியில் மட்டுமே 100 விழுக்காடு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. 33 கல்லூரிகளில் 90 விழுக்காடு இடங்கள் பூர்த்தியாகி உள்ளன.

தமிழ்நட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 56ஆயிரத்து 278 பேருக்கு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14ஆயிரத்து 524 பேரில் 13ஆயிரத்து 893 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 12ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையில் 2ஆம் சுற்றுக்கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 18ஆயிரத்து 521 பேருக்கு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 3ஆம் சுற்றுக்கலந்தாய்வு 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்விற்கு தரவரிசைப்பட்டியலில் 45 ஆயிரத்து 578 முதல் 94 ஆயிரத்து 620 வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்.

இந்தச் சுற்றில் 49 ஆயிரத்து 43 மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பொறியியல் படிப்பிற்கான இறுதிச் சுற்றுக் கலந்தாய்வு தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு இறுதி ஒதுக்கீடு நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தரவரிசைப் பட்டியலில் 94 ஆயிரத்து 621 முதல் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 278 வரையில் இடம்பெற்ற 61 ஆயிரத்து 658 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 1,2,3 ஆம் சுற்றுக்கலந்தாய்வு முடிவுகள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியுள்ளதாவது, 'தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் முதல் மற்றும் 3 சுற்றுகள் முடிவில் 52 ஆயிரத்து 467 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 251 இடங்கள் இருந்த நிலையில் 3 சுற்று முடிவில் 49 ஆயிரத்து43 பேரில் 24,727 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த இறுதிச்சுற்றில் 86,784 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இதே நிலையில் சென்றால் பொறியியல் கலந்தாய்வு முடிவில் 62 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 3 சுற்றுக் கலந்தாய்வில் 446 கல்லூரிகளில் 25 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை.
173 கல்லூரிகளில் 10 விழுக்காடு இடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 33 பொறியியல் கல்லூரியில் 90 விழுக்காடு இடங்களும், 52 பொறியியல் கல்லூரிகளில் 80 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 114 கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. கம்பியூட்டர் அறிவியல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், இசிஇ, ஆர்டிபிசியல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் மாணவர்கள் அதிகளவில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்” என்றார்.

அதேபோல் கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, “பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் 3 கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 25 கல்லூரியில் ஒரு மாணவரும் சேராத நிலையில், 48 கல்லூரியில் ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

115 கல்லூரியில் 5 விழுக்காட்டிற்கும் கீழும், 173 கல்லூரியில் 10 விழுக்காட்டிற்கும் கீழும், 269 கல்லூரியில் 25 விழுக்காட்டிற்கும் கீழும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 3 சுற்றுக்கலந்தாய்விற்கு 94 ஆயிரத்து 620 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 52 ஆயிரத்து 467 இடங்கள் நிரம்பி உள்ளன. ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 251 இடங்களில் 86ஆயிரத்து 784 இடங்கள் காலியாக இருக்கின்றன” என்றார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் 5ஆவது நாளாக பாரத் ஜடோ யாத்திரை... பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிய ராகுல்... !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.