ETV Bharat / state

குடும்ப வன்முறை புகார்: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Nov 18, 2022, 9:36 AM IST

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை, குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு விளக்கமளித்துள்ளது.

சென்னை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவரோ, அவர் சார்பில் மற்றொருவரோ அல்லது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளிக்க குடும்ப வன்முறை தடைச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்ட நடைமுறைகள் உரிமையியல் நடைமுறைகளாக இருந்தாலும், புகார் மனுக்களை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரலாமா என்ற சட்ட கேள்விக்கு விடை காணும் வகையில், இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார்.

இதன் அடிப்படையில் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டிக்கா ராமன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய முழு அமர்வு, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களை ரத்து செய்யக் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482 ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என உத்தரவிட்டது.

மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்த்து அமர்வு நீதிமன்றங்களிலும், அதன் பின் உயர் நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும், ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்ட வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: விரைவில் மருத்துவர்கள் கைது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.