ETV Bharat / state

"இந்துக்கள் ஓட்டு தங்கள் பக்கம் வராது என்பதால் பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர்" - அமைச்சர் சேகர்பாபு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 5:17 PM IST

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

இந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கம் வராது என்ற நம்பிக்கை இழந்த காரணத்தால் தொடர்ந்து பாஜகவினர் அவதூறுகளை பரப்புகின்றனர் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து இல்லாத பல முன்னேற்றங்கள் இப்போது கண்டுள்ளது. பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள் கோயில் பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்ற புகாருக்கு பின் தான் இந்த துறை உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோயில்களிலும் உள்ள குறைகளை பதிவு செய்ய சொல்லி அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில் சான்றோர்கள் சார்ந்த திருப்பணிகள் பணியும் நடக்கிறது. குறிப்பாக 200 உலோக சிலைகள், 100 கற்சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன, அது யார் கைக்கு போகிறது என்று தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பது போல மத்திய அரசு காய் நகர்த்துகிறது. இதுவரை செய்யப்படாத பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சி அமைந்த பின் தான் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்துள்ளது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல.

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கம் வராது என்ற நம்பிக்கை இழந்த காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பாஜகவினர் பரப்புகின்றனர் எனவும், 8001 கோயில்களுக்கு மாநில தொல்லியல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எல்லாம் 1000 கோயில்களுக்கு தான் கிடைக்கும்.

தெய்வங்களையும், தெய்வத்திற்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து, திருப்பணிகளை வழங்கியது திமுக ஆட்சி. இறை சொத்தை களவாடும் ஆட்சி இது இல்லை, பாதுகாக்கும் ஆட்சி இது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்கவும் இந்த துறை தயாராக உள்ளது. கோயிலில் காணாமல் போன சிலைகளை மீட்பது ஒருபுறம் இருந்தாலும் மேலும் களவு போகாமல் இருக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மகா தீப நிகழ்ச்சியில் கடந்த முறை சிறு குறை கூட ஏற்படவில்லை. இந்த முறையும் சிறப்பாக செயல்பட திட்டமிடுவதற்காக காவல்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை என அனைத்தையும் ஒன்றினைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.

இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது, தீபம் நடப்பது விடுமுறை நட்களாக உள்ளதால் அதிக பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. 14 ஆயிரம் காவலர்கள் திருவிழாவில் பயன்படுத்த உள்ளோம். 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம், 60 மருத்துவ முகாம்கள், 300க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து உடனடியாக செயல்படுத்தும் ஆட்சி இது. இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து பதவிகளிலும் இருப்பவர்கள் முழுவதும் இந்துக்கள் தான் இந்துக்கள் அல்லாதவர்கள் எங்கும் நியமிக்கப்படவில்லை. யாரால் திருக்கோயிலுக்கு நன்மை நடக்கிறதோ அவர்கள் தான் அறங்காவலராக உள்ளனர்.

38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருக்கோயில்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தினால் இந்து சமய அறநிலைத்துறை அமைதியாக இருக்காது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பர நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மூன்று பேர் தொல்லியல் துறை அதிகாரிகள் இரண்டு பேர் என ஐந்து பேர் கொண்ட குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளது. சிவகங்கை மாவட்ட கண்டதேவி கோயில் தேரோட்டம் வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும்" இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை.. 22க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.