ETV Bharat / state

அமைச்சரிடம் எதிர்ப்பை பதிவு செய்த தன்னாட்சி கல்லூரிகள்: பொதுபாடத் திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் அமைச்சர்!

author img

By

Published : Aug 2, 2023, 10:40 PM IST

பொது பாடத் திட்டத்தில் அமைச்சரிடம் எதிர்ப்பை பதிவு செய்த தன்னாட்சி கல்லூரிகள்
பொது பாடத் திட்டத்தில் அமைச்சரிடம் எதிர்ப்பை பதிவு செய்த தன்னாட்சி கல்லூரிகள்

உயர் கல்விக்கான பொது பாடத் திட்டத்தை நடப்பாண்டில் அமல்படுத்த சென்னையில் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

சென்னை: உயர் கல்விக்கான பொது பாடத் திட்டத்தை தமிழ்ப் படுத்துவதற்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் நடப்பாண்டில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கற்பிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உயர்கல்வியில் பொதுப்பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மாதிரி பாடத்திட்டம்(மாடல் சிலபஸ்) அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில் 90 சதவீத கல்வி நிறுவனங்கள், அதனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டதாக உயர் கல்வித்துறை தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பொதுப் பாடத்திட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை நடத்த உயர்கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அதன்படி, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நடந்தது.

இதில் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குனர் கீதா, உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னையில் இருந்து 22 கல்லூரிகள் உள்பட மதுரை, கோவை, திருச்சி போன்ற சில மாவட்டங்களில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தனித்தனியாக பதிவு செய்தனர். இவர்களில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி முதல்வர்கள் உள்பட சில கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பொதுப் பாடத்திட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.

ஆனால் கோவை, திருச்செங்கோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரநிதிகள் பொது பாடத்திட்டத்தை ஆதரிக்காமல், அடுக்கடுக்கான எதிர்ப்பு கருத்துகளையும், பொதுப் பாடத்திட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் எடுத்துரைத்தனர். அதன்படி, மிக முக்கியமாக பொதுப் பாடத்திட்டத்தால் என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தையும் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் முன்வைத்தனர்.

மேலும், பொதுப் பாடத்திட்டத்துக்கு போதிய பாடவேளை நேரம் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கிரெடிட் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்னை, விருப்ப பாடங்களை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதற்கு எதிர்ப்பு, இளநிலை பாடத்திட்டத்தை விட முதுநிலைப் பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் என பல்வேறு எதிர்ப்பு கருத்துகளைக் கூறினார்கள். அதிலும் குறிப்பாக ஓரிரு கல்லூரிகளின் பிரதிநிதிகள் புதிய தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ''தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம்முடைய கல்வி முறையான 10+2+3 என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள், பிரதிநிதிகளைப் பார்த்து பொதுப் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கையை தூக்கி தங்கள் விருப்பத்தை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதற்கு கலந்து கொண்டவர்களில் பாதிக்குமேல் யாரும் கையை தூக்கவில்லை.

அந்தவகையில் பார்க்கும்போது பொதுப் பாடத்திட்டத்தை பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகள் ஆதரிக்காதது போலவே இருந்தது. அதிலும், சிலர் இதை ஒரு நாளில் பேசி சரிசெய்துவிட முடியாது. அடுத்தடுத்த ஆலோசனை நடத்திதான் சரிசெய்ய முடியும் என்றும், எனவே இந்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறினார்கள்.

இதுகுறித்து தன்னாட்சி கல்லூரி பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பொதுப் பாடத்திட்டம் சரி தான். ஆனால் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டியிருக்கிறது. அது பற்றி எடுத்துரைத்தோம். அந்த மாற்றங்களை எழுத்துப்பூர்வமாக கல்லூரிகளை தெரிவிக்க அமைச்சர் கூறியிருக்கிறார். நாங்கள் தெரிவிக்கும் மாற்றங்களை மட்டும் செய்தால், பொது பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக உள்ளார்’ - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.