ETV Bharat / state

கண்டம் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஜோசியர் கைது!

author img

By

Published : Sep 4, 2020, 5:57 PM IST

சென்னை: கணவருக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகக் கூறி அதைச் சரிசெய்ய மனைவிடம் ரூ. 5 ஆயிரம் ஏமாற்றி வாங்கிச்சென்ற ஜோசியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த வாணுவம்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி (40). இவரது மனைவி வள்ளி (35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஜோசியர் ஒருவர் குறி சொல்ல வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது வள்ளியிடம் உங்கள் கணவருக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகவும், அதை சரி செய்ய செய்வினை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.5 ஆயிரம் பணம் செலவாகும் எனவும் ஜோசியர் கூறியுள்ளார்.

இதையடுத்து கணவருக்கு வாகனத்தில் கண்டம் என்று கூறியதும் வள்ளி பயந்துபோய் ஜோசியரிடம் ரூ. 5 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். பின்னர் இதைப்பற்றி வள்ளியின் கணவர் பழனிக்கு தெரியவர, ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவியை ஏமாற்றி 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜோசியர் ஒருவர் சென்றுள்ளார் என பழனி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கண்டம் இருப்பதாகக் கூறி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசியர் குமார்(42) எனத் தெரியவந்தது. மேலும் அவர் இதுபோன்று வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வந்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.