ETV Bharat / state

அடுத்தடுத்து காலியாகும் தலைமைப் பொறுப்புகள்; தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

author img

By

Published : May 17, 2023, 3:45 PM IST

அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான பட்டியல் தயாரிப்பு
அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான பட்டியல் தயாரிப்பு

வருகின்ற மே 31ஆம் தேதியுடன் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான பட்டியல் தயாராகிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராக இருந்த இறையன்புவை, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமித்தார்.

தற்போது திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடித்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்தும், 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஐஏஎஸ் இறையன்புவின் பணிக்காலம் வருகின்ற மே 31ஆம் தேதி முடிகின்றது எனக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஆறு மாதம் பணி நீடிப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் உள்ளது.

தகவல் ஆணையர் - தனி அதிகாரம்? : தமிழ்நாடு தகவல் ஆணையம் என்பது சட்டரீதியாக தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு உள்ளது. இந்நிலையில் இந்தப் பதவிக்கு பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் விண்ணப்பித்த நிலையில், தலைமைச்செயலாளர் என்ற உயரிய அந்தஸ்து கொண்ட இறையன்புவை வேறு துறைக்குச் செயலாளராகவோ அல்லது ஆணையராகவோ நியமிக்க முடியாத நிலையில் தலைமைச் செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

இந்நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் என்ற பெயர் பட்டியலில், ஹான்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ், சிவதாஸ் மீனா ஐஏஎஸ், விக்ரம் கபூர் ஐஏஎஸ், எஸ். கே. பிரபாகர் ஐஏஎஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கிறது.

சிவதாஸ் மீனா ஐஏஎஸ்: இவர் 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர். இதையடுத்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் அவர் டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டிற்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் அழைத்துப் பணியில் அம்ர்த்தப்பட்டார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஐஏஎஸ் அதிகாரி சிவதாஸ் மீனா மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. ஊழல் கண்காணிப்பு ஆணையர் அரசில் இருந்து தன்னிச்சையாக செயல்பட வேண்டியவர். ஆனால், சிவதாஸ் மீனா தன்னிச்சையாக இயங்கவில்லை எனக்குற்றச்சாட்டு வைத்தது, அறப்போர் இயக்கம்.

சென்னை, கோவை மாநகராட்சி சம்பந்தமான அறப்போர் இயக்கத்தின் ஊழல் புகார் மீது ஐஏஎஸ் மற்றும் பிற அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை. இந்த விஷயத்தில் 8 மாதத்திற்கும் மேல் தாமதப்படுத்தினார் என கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அறிக்கையை அறப்போர் இயக்கம் வெளியிட்டது. இந்நிலையில் சிவதாஸ் மீனாவுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஹான்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் : ஹான்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். எனவே இவருக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ்நாட்டில் தற்போது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் உள்ளார். இவருடைய பதவிக்காலமும் வருகின்ற ஜூன் மாதம் முடிகிறது. இவர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்டவைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் அதிகம் கவனத்தை செலுத்தினார். மேலும் ஆபரேசன் கஞ்சா 2.0 போன்றவைகளை அறிமுகம் செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சைபர் கிரைம் மோசடிகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுத்தவர். இந்நிலையில் தமிழக அரசின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் சென்னை காவல் துறை கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால், மூத்த காவல்துறை அதிகாரிகள் ஏகே.விஸ்வநாதன், ஆபாஸ்குமார், சீமா அகர்வால் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஏ.கே.விஸ்வநாத் ஐபிஎஸ்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.கே.விஸ்வநாத் சென்னை கமிஷனராக இருந்த போது மூன்றாவது கண் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் காரணமாக சென்னை நகரத்தில் குற்றச் சம்பவங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

சென்னை காவல் துறை கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால்: இவர் சென்னையில் நடைபெறும் குற்றங்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் நபராகத் திகழ்கிறார். விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரியாக வலம் வருகிறார். தலைநகரான சென்னையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

மேலும் இவருக்கு அடுத்த டிஜிபி பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் குறித்து இன்று அல்லது ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரத்திற்க்குள் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அகவிலைப்படி 4% உயர்வு - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.