ETV Bharat / state

போதைக்கு எதிரான ஃபிட்னெஸ் போட்டி: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி - பரிசுத்தொகை ரூ.10 லட்சம்

author img

By

Published : Sep 13, 2022, 6:18 PM IST

ஃபிட்னெஸ் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி!
போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி!

சென்னை: போதைப்பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) எனும் அமைப்பின் மூலம் உலக அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார்.

இம்முயற்சி குறித்து உரையாற்றிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதேபோல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம்.

ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கைப் பரவலாக உள்ளது, அது உண்மையல்ல," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப்பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம்.

இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்.

​நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னைப்போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். மோகன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்," என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

"இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். மாநிலத்தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற போட்டிகளை போல் அல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.

இதையும் படிங்க:ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை குருவியிடமிருந்து கடத்திய காவலர் உள்ளிட்ட மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.