ETV Bharat / state

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வில் 20,160 இடங்கள் ஒதுக்கீடு!

author img

By

Published : Jul 31, 2023, 12:46 PM IST

பொறியியல் படிப்பில் சேருவதற்குபொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வில் 20,160 இடங்கள் ஒதுக்கீடு
பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வில் 20,160 இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் தற்காலிகமாக 20 ஆயிரத்து 160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்து உள்ளது.

சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் தற்காலிகமாக 20 ஆயிரத்து 160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது.

மேலும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9 ஆம் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 430 கல்லூரிகளில் உள்ள 2 இலட்சத்து 14 ஆயிரத்து 960 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 இலட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றது.

விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து www. tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பொறியியல் கலந்தாய்வில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 685 இடங்கள் நிறைவடைந்தது. இந்த கலந்தாய்வில் விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு ஜூலை 28 தொடங்கியது. இணைய வழியாக நடைபெற்ற இந்த கலந்தாய்வில் www.tneaonline.org என்ற இணைய தளம் வழியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பொது கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி ஜூலை 30 ஆம் தேதி வரை மாணவர்களுக்கான விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மாணவர்கள் இந்த இடங்களை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு உத்தரவு ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் அல்லது பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் தங்களுக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.

தற்பொழுது கிடைத்துள்ள கல்லூரியை விட மேலே தான் பதிவு செய்த கல்லூரி கிடைத்தால் விரும்புகிறேன் என கூறிய மாணவர்களுக்கு 9ஆம் தேதி கல்லூரி ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கீடு செய்த விபரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் 1 இடம் தொடங்கி 22 ஆயிரத்து 761 இடம் வரையில் உள்ள மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 18 ஆயிரத்து 738 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனர். அதில் 17 ஆயிரத்து 818 மாணவர்களுக்கு தற்காலிகமாக அவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசை பட்டியலில் 1 இடம் தொடங்கி 1,074 இடம் வரையில் உள்ள மாணவ மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில், 947 மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளை பதிவு செய்தனர்.

அதில் 937 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலில் 1 இடம் முதல் 2 ஆயிரத்து 215 இடம் வரை அனுமதி அளித்ததில், 1,389 பேர் விரும்பும் கல்லூரி பதிவு செய்வதில் 1,207 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

அதே போன்று தொழிற்கல்வி பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில் 1 இடம் முதல் 559 பேர் அனுமதிக்கப்பட்டு, 250 பேர் கல்லூரியை பதிவு செய்வதில் 198 பேருக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்!..3.82 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணி தொடங்கப்பட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.