ETV Bharat / state

அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்க வலியுறுத்தி போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

author img

By

Published : Oct 1, 2021, 10:19 PM IST

அண்ணாமலை
அண்ணாமலை

அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற 7ஆம் தேதி கோயில்களின் முன்னர் பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளனர் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்ணாமலை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”திமுக அரசானது புனித நாளாகக் கருதப்படும் வெள்ளி, விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் திருக்கோயில்களை மூடுகிறது.

அதை மாற்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் திருக்கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளானது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், உணவகங்கள், சாலைப் போக்குவரத்து என எல்லாமே வழக்கம்போல் இயங்கும்போது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் வார நாள்களில் மூடுவது வஞ்சக எண்ணமே ஆகும்.

பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாள்கள் தடுத்து, நான்காவது நாள் அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய்ப் பரவுவதைத் தடுப்பதாகக் கூறுவதை யாரும் ஏற்க முடியாது.

போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ஹெச். ராஜா

இதனால் அனைவரையும் அனைத்து நாள்களிலும் கோயில்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற 7ஆம் தேதி முக்கியக் கோயில்களுக்கு முன்பாக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கின்றனர்.

நவராத்திரி பண்டிகைகள் நெருங்குவதால் உடனடியாக அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும். இதனை நமது முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஒருங்கிணைக்கிறார். அனைவரும் போராட்டத்தில் பெரும் திரளாகக் கலந்துகொண்டு அரசை திகைக்கவைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்திக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து செய்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.