'அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!' - அரவிந்த் கெஜ்ரிவால்

author img

By

Published : Sep 5, 2022, 7:49 PM IST

’அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!’ - அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பார்வையிட்டு, அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

சென்னை: 'புதுமைப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இந்நூலகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடனும்", யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 6.2 இலட்சம் நூல்கள் உள்ளன.

இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. தரைத் தளத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி பிரிவு, முதல் தளத்தில் சொந்த நூல்கள் படிப்பதற்கான பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான பிரிவு, இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, மூன்றாவது தளத்தில் கணிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உளவியல், சமூகவியல், தத்துவவியல், அறவியல், அரசியல் அறிவியல் தொடர்பான நூல்களும்,

நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல் மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்களும், ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்களும், ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, நுண்கலை மற்றும் விளையாட்டுத் தொடர்பான நூல்களும்,

ஏழாவது தளத்தில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், வரலாறு, புவியியல், சுற்றுலா, வாழ்க்கை வரலாறு, மின்-நூலகம் ஆகியவையும், எட்டாம் தளத்தில் நிர்வாகப்பிரிவு மற்றும் அரிய புத்தகங்கள் பிரிவும் உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்று, முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக வேலு சரவணன் வழங்கிய “கடல் பூதம்” நிகழ்ச்சியைப் பார்வையிட்டார்.

மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆறாம் தளத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, ஏழாம் தளத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

மேலும், நூலகத்தின் எட்டாம் தளத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாதிரிப்பள்ளிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலுள்ள மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், பரிசுகள் வழங்கினார்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த புகைப்பட விளக்கப் புத்தகத்தை வழங்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட பின்பு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், “It’s a pleasure to visit this library. Such huge collection of books and manuscripts so well managed and kept. It’s not just Tamil Nadu’s pride but India’s pride. Keep it up” என்று தனது கருத்தினை எழுதி கையொப்பமிட்டார்.

இதையும் படிங்க: புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.