ETV Bharat / state

4 ஆண்டுகளாக போலீசுக்கு டேக்கா கொடுத்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 9:58 PM IST

4 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
4 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவான கொனிடாலா கிரிதர், ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், கத்தார் நாட்டில் இருந்து இன்று (நவ.1) விமானம் மூலம் சென்னை வந்த போது சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: ஆந்திர மாநிலம், திருப்பதி புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் கொனிடாலா கிரிதர் (56). இவர், அவரது மருமகளை கொடுமைப்படுத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி அடித்து உதைத்ததாக, திருப்பதி புறநகர் காவல் துறைக்கு 2019 ஆம் ஆண்டு, அவருடைய மருமகள் புகார் அளித்தார். இதையடுத்து திருப்பதி புறநகர் காவல் துறையினர், அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அடித்து உதைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொனிடாலா கிரிதரை கைது செய்ய தேடி வந்தனர்.

ஆனால் இவர் காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவானார். அதோடு அவர் வெளிநாட்டுக்கும் தப்பிச் சென்று விட்டார் என்றும் காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பதி புறநகர் மாநகர காவல் ஆணையர், கொனிடாலா கிரிதரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். பின்னர் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி-யும் (LOC - Look out cirucular) போடப்பட்டது.

இந்த நிலையில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று (நவ.1) அதிகாலை 1:50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த குற்றவாளியான கொனிடாலா கிரிதரும் வந்தார். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில், பரிசோதித்த போது, அவர் திருப்பதி புறநகர் காவல் ஆணையரகத்தால் தேடப்படும் 4 ஆண்டுகள் தலைமுறைவான குற்றவாளி என்று தெரிய வந்தது. இந்நிலையில், அவரை வெளியில் விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, குடியுரிமை அலுவலகத்தில் இருந்த அறை ஒன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் உடனடியாக சென்னை விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொனிடால விமான நிலையத்தில் பிடிபட்டது குறித்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் மாநகர காவல் ஆணையரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பதி புறநகர் மாநகர காவல் ஆணையரகத்தின் தனி படை காவல் துறையினர், இன்று (நவ.1) பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று கொனிடாலா கிரிதரை பலத்த பாதுகாப்புடன் கைது செய்து ஆந்திர மாநிலம் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ரூ.2.27 கோடி அபராதம் விதிப்பு என தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.