ETV Bharat / state

"தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:28 PM IST

anbumani ramadoss
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி

Anbumani Ramadoss Press Meet: தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், சமூக நீதி பேசினால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா‌.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாகச் சந்தித்து, வன்னியருக்கும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யக்கோரி மனு அளித்தோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடிவெடுப்பதாகச் சொன்னார்.

அதிமுக ஆட்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. பின் ரத்து செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வழங்குங்கள் என்று கூறியது.

இதுதொடர்பாக தரவுகளை ஆய்வு செய்வதற்கு அதிகபட்சமாக 5 நாள்கள் போதும். ஆனால், 9 மாதங்கள் ஆகியும் தரவுகள் ஆய்வு செய்வதற்கு வரவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருவார்களா என்று சந்தேகம் எழுகிறது. இதனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து உள்ளோம்‌.

மேலும், தரவுகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் தரவுகளைச் சேகரித்து தந்தால் தான் தமிழக அரசு சட்டம் இயற்ற முடியும். 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி பிரச்னை மட்டும் இல்லை, தமிழகத்தின் வளர்ச்சி பிரச்னையும் தான். மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும்.

இந்த பிரச்னையை சாதி, மதம், இனப் பிரச்னையாக பார்க்கக் கூடாது என்றும் கடந்த 30 ஆண்டுகளாக 10,12ம் வகுப்புகளில் வட மாவட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்களாகவே இருக்கிறது. அதிகமான குடிசைப்பகுதி, அதிக மது விற்பனை, வட மாவட்டங்களில் தான் இருக்கிறது. இதனால் வட மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக காணப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் பல முயற்சியை செய்தது. இருப்பினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிகார் மாநிலத்தைவிட குறைந்த நாள்களில் செய்து முடிக்கலாம்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள மக்கள் தொகைக்கு சாதி வாரி கணக்கெடுப்பைத் தொடங்கினால் ஒரு வார காலத்திற்குள் முடித்துவிட முடியும். ஆனால் தமிழக அரசு அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதி பேசினால் மட்டும் போதாது, அதை செயலிலும் காட்ட வேண்டும்.

காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு வேண்டும். காவிரிப் படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் என யார் சொன்னாலும் கர்நாடக அரசு கேட்பதாக தெரியவில்லை. அதனால், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து அணைகளும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"முதல்வர் உங்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்.. பார்த்து நடந்துக்கோங்க" - அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.