ETV Bharat / state

கூட்டணி துரோகமே விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் - பிரேமலதா விஜயகாந்த்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 4:23 PM IST

Premalatha Vijayakanth Byte: கூட்டணி அமைத்துத் தேர்தல் களம் கண்டதால் பல துரோகங்களை விஜயகாந்த் சந்தித்ததாகவும், அதுவே அவரின் உடல்நலக் குறைவுக்கு மிக முக்கிய காரணம் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Alliance betrayal was the main reason for Vijayakanth ill health
கூட்டணி துரோகமே விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம்

கூட்டணி துரோகமே விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் - பிரேமலதா விஜயகாந்த்..

சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளரும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலில் பெண்களுக்குச் சவால் அதிகம் உள்ளது. இதற்கு உதாரணம் புரட்சித் தலைவி அம்மா தான். தேமுதிக எந்த லட்சியத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நிறைவேற்றும் முனைப்பில் பயணிப்பேன்.

இதற்குப் பல தடங்களும், பிரச்சனைகளும் வரும். ஆனால், அதைத் தாண்டி நிறைவேற்றுவேன். விஜயகாந்த்தைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதல், தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாக இருந்துள்ளேன். விஜயகாந்த்தின் உடல்நிலை குறைவு என்பதால், தேமுதிக-விற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது உத்தரவின் படி தொடர்ந்து தேமுதிக பயணிக்கும்.

100 ஆண்டுக் கால அனுபவம், 19 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் பெற்ற வலிகள் என்னை வலிமையாக்கி உள்ளது. தேமுதிக பல வெற்றித் தோல்விகளைக் கண்டுள்ள கட்சி. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தோம். ஆனால், 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, கூட்டணி அமைத்து களம் கண்டதால் பல துரோகங்களுக்கு ஆளாக்கப்பட்டோம்.

அதன் பிறகு நடந்தவையால் விஜயகாந்த்-க்கு சறுக்கல் ஏற்பட்டது. அந்த மன உளைச்சலே, அவரது உடல் நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது. இனி வரும் காலத்தில் தேமுதிக வெற்றி வியூகம் வகுக்கும். அண்ணனின் பாதி தான் அண்ணி. அதனால் விஜயகாந்த் மீது கொண்ட அன்புக்குத் தலை வணங்குகிறேன். அதே நேரத்தில் மக்களுக்குப் பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஆதரவு தெரிவிப்பேன்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய ரோல் மாடல் என்றால் புரட்சித் தலைவி அம்மாவைத் தான் சொல்லுவேன். அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு நிறையப் பிடிக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எப்போதும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தான். அதே போன்று தான் நானும்.

நமக்குத் தேவையான மழை நீர் அதிகமாகவே ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகிறது. ஆனால் சேமிக்கும் திட்டம் தான் இல்லை. உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் மழை நீரினை சேமிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்திட வேண்டும். சரியான திட்டமிடல் இருந்தால், யாரிடமும் தமிழ்நாடு கையேந்த வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல், அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்.
விரைவில் தேமுதிக-வில் பலருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. மகளிருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆளுநர் பேச்சுக்களின் சர்ச்சைகள் குறித்துப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “ஆளுநர் பேசுவது அனைத்தும் தவறானதும் இல்லை. முதலமைச்சர் பேசுவது அனைத்தும் சரியானதும் இல்லை” என்றார். மேலும், “விஜய பிரபாகரனுக்குப் பொறுப்பு வழங்குவது குறித்து நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விஜயகாந்த் உடன் இருந்த எனக்கு, கட்சி தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பொருளாளர் பொறுப்பு வழங்கினார்.

அதனால் விஜய பிரபாகரனுக்குப் போதிய அனுபவம் எட்டும் போது உரியப் பொறுப்புகள் வழங்கப்படும். அதுவரை கட்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார். விஜயகாந்த்தின் உடல் நிலை குறித்து தவறான பதிவுகள் வெளியாகி இருந்தது. இதனால் உண்மைத் தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: “சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.