சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் இல்லத்தில், அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒருங்கிணைப்பாளர் பதவியை யாரும் நீக்க முடியாது. இந்த பதவி செல்லும்.
டெல்லி பயணத்திற்கு பிறகு ஓபிஎஸ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவை பலப்படுத்த இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேவை.
ஆட்சியைக் காப்பாற்ற ஓபிஎஸ் தேவை. அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற அன்றைக்கு 3 அமைச்சர்கள் ஓபிஎஸ் காலில் விழுந்தார்கள். இன்றைக்கு எல்லோரையும் ஓரங்கட்டி விட்டு, ஒரு கம்பெனி போல கட்சியை நடத்த முற்படுகிறார்கள்.
கட்சியை நாங்களே வழி நடத்துவோம். நாங்கள் ஏன் தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும். ஆயிரம் சி.வி.சண்முகம் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.
ஓபிஎஸ் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளார் என்று தெரிவித்தார். நேற்று (ஜூன்.24) பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், "அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டன" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் - ஜெயக்குமார் திட்டவட்டம்!