ETV Bharat / state

மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடலைனா என்ன? அதுவா முக்கியம் - ஈபிஎஸ் தாக்கு

author img

By

Published : Jul 5, 2023, 11:49 AM IST

General Secretary Edappadi Palaniswami
General Secretary Edappadi Palaniswami

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடலாட்டி என்ன? அதுவா முக்கியம் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: அதிமுகவின் பொன் விழா மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இது குறித்து அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை பொன் விழா மாநாடு குறித்தும், எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. மேலும், எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஆலமரம் போல் தழைத்து நிற்கிறது. அதிமுக வரலாற்றில் இன்றைய தினம் சரித்திரம் படைத்த நாளாக உள்ளது. 2018-ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது.‌ மீண்டும் 3 மாதத்திற்கு முன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. இன்று அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டரை மாதத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு.

எங்களை வீழ்த்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் எத்தனையோ வித்தைகள் நிகழ்த்தினார்கள். ஆனால் அவை எல்லாம் தகர்க்கப்பட்டன. ஆனால், இன்று தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. சிலர் திமுகவிற்கு பி-டீமாக செயல்பட்டு எங்களை உடைக்க நினைத்தார்கள். அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை மூலமாக பதில் சொல்லியுள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு வீர வரலாற்று மாநாடு அடித்தளமாக அமையும்" என கூறினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது மாநிலங்களுக்கு இடையே உள்ள உறவை சீர்குலைக்கும் வகையில் கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் பேசி வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிமுக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தினோம். இப்போது காங்கிரஸ் - திமுக இணைந்து இருக்கின்றன. இந்தியா முழுவதையும் ஓருங்கிணைப்பேன் என்று கூறுகின்ற முதல்வர் ஏன் அவர்களிடம் பேசி ஜூன் மாதத்திற்கான தண்ணீரை பெறவில்லை.

இன்றைய முதலமைச்சர் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி. அதிமுக ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக இருந்தது. கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியது அதிமுக அரசு. இன்றைய தினம் திமுக தங்களையே புகழ்ந்து கொள்கிறது. 2 ஆண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்து விட்டது. உரிய முறையில் நிர்வகித்தால் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 3 மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 500 மாணவர் மருத்துவ படிப்பை இழந்துள்ளார்கள்.

அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவமனைகள் கொண்டு வந்தோம்‌‌. திமுக ஆட்சியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இனியாவது திமுக அரசு விழித்து கொள்ள வேண்டும். விலைவாசி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், மாமன்னன் குறித்து கேள்வி கேட்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு தான் முக்கியம் தவிர மாமன்னன் படம் முக்கியமில்லை. அது ஓடினால் என்ன? ஓடலாட்டி என்ன? தற்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் குறித்து படம் எடுக்கிறார்கள்.

எங்கள் ஆட்சியில் சபாநாயகர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டப்பேரவையில் திமுக அவரது சட்டையை கிழித்தார்கள். அவரது இருக்கையில் திமுகவினர் அமர்ந்து இருக்கையின் புனிதத்தை கெடுத்தார்கள். இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயம் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.

பாஜக உடனான உறவு குறித்து நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கின்றோம். நாங்கள் கூட்டணி குறித்த குழப்பம் இல்லாமல் இருக்கிறோம். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து செல்வோம். நேரம் வரும்போது வெளிப்படையாக பேசவோம்" என கூறினார்.

இதையும் படிங்க: சினிமா தொடர்பான கேள்விகளுக்கு கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.