நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

author img

By

Published : May 16, 2023, 5:02 PM IST

ADMK

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மே17) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததில் இருந்தே, பல்வேறு நடவடிக்கைகளை அவரது தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.

கட்சியை வலுப்படுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாகவும், சமீபத்தில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்தும், அவர்களது சந்திப்பின் மூலம் தென் மாவட்டங்களில் ஏற்படும் தாக்கம் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் இருந்தனர். ஆனால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால் அவருக்கு ஆதரவாக 6 மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அதிமுகவில் 69 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். எனவே, மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமிப்பது குறித்தும், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, வளர்ச்சி குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன், எடப்பாடி பழனிசாமி விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கத்தால் தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கான வாக்கு வங்கி தேய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மூவரின் நீக்கத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தை சரி செய்வதற்கான பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இறங்கிவிட்டார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் டெல்டா மாவட்டத்தின் முகமாக பார்க்கப்பட்ட வைத்திலிங்கத்தின் இடத்தை நிரப்ப முன்னாள் அமைச்சர் காமராஜை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சியில் நடைபெற்றது. அப்போது கட்சியில் சரியாக பணியாற்றாதவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள் என, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இதேபோல், கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பணி ரீதியாக எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராய விற்பனை என்பது எல்லா ஆட்சிக்காலத்திலும் தான் இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓபன் டாக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.