ETV Bharat / state

Surya Speech: கல்வி மூலம் வாழ்க்கையைப் படியுங்கள் - அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!

author img

By

Published : Jul 16, 2023, 3:15 PM IST

அகரம் அறக்கட்டளை
agaram foundation

சாதி, மதத்தைத் தாண்டி வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள், கல்வி மிகவும் அவசியம் என ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா பேசினார்.

கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள் என நடிகர் சூர்யா பேச்சு

சென்னை: நடிகர் சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 2 ஈழத்தமிழர் மாணவர்கள், பெற்றோர்களை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள் என 25 அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர் கார்த்தி மேடையில் பேசும்போது, ''இந்த காலகட்டம் முக்கியமானது. அனைவரும் படிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து தன் மாமாவின் உதவியால் படித்து உயர்ந்தவர், என் அப்பா. ஒருவன் படித்து விட்டால், அவன் தலைமுறையே செழிக்கும் அதற்கு நாங்களே சாட்சி.

அகரம் விருது வழங்கும் விழா 44ஆவது வருடத்தில் வந்து நிற்கிறது, அதுவே மகிழ்ச்சி. கிராமப்புறத்தில் இருந்து படித்து ஒருவன் 50 மதிப்பெண்கள் வாங்குவதற்கும் சென்னையில் படித்து ஒருவன் 100 மதிப்பெண்கள் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தன்னம்பிக்கையை எப்போதும் கொண்டிருங்கள். எல்லோராலும் முடியும். தமிழ் மீது அகரம் மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் அதிகம். இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி'' என்றார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகுமார் மேடையில் பேசுகையில், ''இந்த குழந்தையின் கதைகளைக் கேட்கும் போது நெஞ்சு அடைக்கிறது. என்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட உங்கள் நிலைமைதான். என் அம்மா அப்போதே அரளி கொட்டையை அரைத்து கொடுத்திருந்தால் 1941-லேயே சென்றிருப்பேன். அவள் செய்யவில்லை. இப்போது இங்கு நிற்கிறேன். தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாடியது கிடையாது. அப்போது நாங்கள் படிப்பதற்கு கட்டணம் தான். 750 ரூபாய் கட்டி முழு படிப்பையும் முடித்தேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. LKG படிப்பதற்கே இப்போது 3 லட்சம் ரூபாய் ஆகிறது.

மேலும், 192 படங்கள் நடித்து விட்டேன். 40 கோடி frame-ல் இருந்த எனது புகைப்படம், அந்த 5 ரூபாய் புகைப்படத்தில் இல்லை. திரும்ப அவர்களை வைத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த புகைப்படத்தை எடுத்து விட்டேன். 7 ஆண்டுகள் படம் வரைந்தேன். அதை புத்தகமாக எனது மகன்கள் போட்டுள்ளனர். அதுதான் என்னுடைய அடையாளம். நான் ஓவியனாக வாழ்ந்திருந்தால் சத்தியமாக கல்யாணம் செய்திருக்க மாட்டேன்.

அது மாறியதால் நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் இப்போது இந்த மேடையில் நிற்கிறேன்‌. குழந்தைகளை நன்றாக வளருங்கள். அதுதான் வெற்றி. என்னுடைய குருநாதர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் 70 வயதுகளிலேயே காலமாகினர். ஆனால், நான் 82 வயதில் 4 மணி நேரம் மேடையில் பேசி உள்ளேன்'' என்றார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா மேடையில் பேசுகையில், ''44 ஆண்டுகள்... அன்பாக கேட்டுக் கொண்டதால் இவ்விழாவை சிறப்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பப் புள்ளி ஆறுமுகம் தான். தற்போது ஒரு வேர் மாதிரி பரவி இருக்கிறது. எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும். அந்த சமூக அக்கறை எங்களுக்கும் இருக்கிறது. தன்னலம் பார்க்காத ஆர்வலர்களால் தான் இப்படி ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.

மாணவர்களின் பயணம் சாதாரண பயணம் கிடையாது. அர்த்தம் ஆனதாகப் பார்க்கிறேன். அகரமிலிருந்து வரும் மாணவர்களின் தனித்தன்மை வேறு என்று கல்லூரியில் கூறுகிறார்கள்‌. Leadership quality அகரம் மாணவர்களிடம் இருக்கிறது. Sympathy வேறு... Empathy வேறு‌. பெண்கள் மீதான அந்தப் பொறுப்பு எனக்கே இப்போது தான் வந்துள்ளது. சரியாக வீடு கூட இல்லாத மாணவர்களுக்கு அகரம் மாற்றத்தைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தோஷம். தன்னார்வலர்களுக்கு நன்றி'' என்றார்.

மேலும், ''ரொம்ப முக்கியம் கல்வி. சாதி, மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள். வீண்சொல், பழிச்சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக்கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையைப் படியுங்கள்‌. சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முக்கியம் கல்வி. அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். 3 வருடம் அகரம் அரசோடு சேர்ந்து இயங்கி வருகிறது.

சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்று 5,200 மாணவர்களின் வாழ்க்கையைத் தொட முடிந்துள்ளது. 14 வருடத்தில் அரசோடு சேர்ந்து பயணிக்கும் போது 1 லட்சம் மாணவர்களை தொட முடிந்தது. அகரம் எங்களுடையது கிடையாது. உங்களுடையது. நம்முடையது. அகரம் கதவு எப்போதும் திறக்கப்பட்டிருக்கும்'' என்று பேசினார்.

இதையும் படிங்க: Manipur violence: மணிப்பூரில் நாகா பழங்குடியின பெண் சுட்டுக்கொலை - 3 லாரிகளுக்கு தீ வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.