ETV Bharat / state

ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் நல்லாட்சி வரும்: கே.வி.தங்கபாலு

author img

By

Published : Feb 6, 2023, 4:40 PM IST

ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் நல்லாட்சி வரும்
ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் நல்லாட்சி வரும்

ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் 2024ம் ஆண்டு நல்லாட்சி வரும். அப்போது ஏமாற்றப்பட்டவர்கள் (அதானி மற்றும் அம்பானி) கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

சென்னை: LIC - SBI வங்கியில் பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கி ஏமாற்றிய அதானியை பாஜக அரசு காப்பாற்றுவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரை வார்ப்பதாகவும் கூறி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அடையார் சாஸ்திரி நகரில் எஸ்பிஐ வங்கி முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கே.வி.தங்கபாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், அதானியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.வி.தங்கபாலு,"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே ஆணைப்படி இந்தியா முழுவதும் இன்று மக்கள் விரோத பிஜேபி அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, அதானிக்கு எல்.ஐ.சி.; ஸ்டேட் வங்கி மூலம் கோடிக்கணக்கான மக்கள் வரி பணத்தை தாரை வார்த்து கொடுத்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மக்கள் பணம் மக்களுக்குச் சொந்தம். மத்திய அரசு மக்கள் பணத்தை அம்பானி, அதானிக்கு தாரை வார்த்து அவர்களுக்கு நிவாரணமும் கொடுக்கிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை நாடு முழுவதும் சொல்ல வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே ஆணையிட்டுள்ளார். மக்களை ஏமாற்றுவோரை மக்களுக்கு அடையாளம் காட்டும் வகையிலும், அவர்கள் பணம் அவர்களுக்கு திரும்ப கிடைத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மக்களால் மக்கள் ஆளும் நிலையை காங்கிரஸ் கட்சி மட்டுமே தர முடியும். நல்லாட்சி வேண்டும் என்றால் அது காங்கிரஸ் தலைமையிலே வர வேண்டும். ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் 2024ம் ஆண்டு நல்லாட்சி வரும். அப்போது ஏமாற்றப்பட்டவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள். மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்தார். இதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கனமழை சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.