ETV Bharat / state

ஐவர் குழுவினரின் திடீர் சந்திப்பு... அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!

author img

By

Published : Jul 7, 2020, 4:18 PM IST

அதிமுக
அதிமுக

சென்னை: அதிமுக நிர்வாகிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் குழு, நேற்று இரவு திடீரென நடத்திய ஆலோசனைக் கூட்டதால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவிவருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவருகிறது. அதிமுகவின் தேர்தல் வியூக பணியானது, திமுகவில் பணியாற்றிய சுனிலிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஊராட்சி ஒன்றியச் செயலாளர்கள் பதவி ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப அணி பதவிகளும் மாற்றியமைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கட்சி தொடர்பாக வரும் புகார்கள், மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை விசாரிக்க அதிமுக கட்சித் தலைமை சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று இரவு திடீரென வந்துள்ளனர். நீண்ட நேரமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை மாற்றுவது குறித்தும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளித்த புகார் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள், எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பரிந்துரை செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஐவர் குழு திடீரென நடத்திய ஆலோசனையால், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் குழுவினர் மீண்டும் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.