ETV Bharat / state

“எங்கள் பெரியண்ணா..” விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 2:09 PM IST

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி!
விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி!

Suriya tribute at Vijayakanth memorial: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று (ஜன.5) நடிகர் சூர்யா மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: “விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாதது ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு” என விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், நடிகர் சூர்யா மலர் வளையம் வைத்து, ஆரத்தி எடுத்து, அமர்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா பேசியதாவது, “விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாதது ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. சினிமாவில், ஆரம்ப காலகட்டத்தில் பல படங்கள் நடித்தும் பெரிய அளவில் எனக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை.

பின்னர், பெரியண்ணா என்ற படத்தின் மூலமாக அவரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரியண்ணா படப்பிடிப்பு தளத்தில் என்னை அவர் அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். நடிப்பவர்களுக்கு உடலில் சக்தி வேண்டும் என்று கூறி, கட்டாயப்படுத்தி எனக்கு ஊட்டிவிட்டார்.

திரைப்பிரபலங்கள் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால், அவரை அனைவரும் எளிமையாக அணுக முடியும். அவர் செய்த துணிச்சலைப் பார்த்து அசந்து போயுள்ளேன். அவரை மீண்டும் சந்தித்து நேரில் அமர்ந்து பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அவரைப்போல் இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்பது பெரிய இழப்பு.

நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில், அவருக்கு பெரிய பங்கு உள்ளது. அதற்கான மரியாதையை நிச்சயம் செய்ய வேண்டும். அனைவரும் கோரிக்கை விடுத்ததுபோல் அவருக்கு மணிமண்டபம், சிலை அமைப்பது மற்றும் நடிகர் சங்க கட்டடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து, அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அவரின் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என்று கூறினார்.

விஜயகாந்த் மறைவின்போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று (ஜன.4) சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வேட்டி சேலை அணிந்து வெளிநாட்டினர் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.