சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளனர். அப்போது மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்வைத் தொடங்கி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர், மாரிமுத்து. மாரிமுத்துவை வெள்ளித்திரையில் இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தார், மாரிமுத்து.
ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து பேசும் ’இந்தாம்மா.. ஏய்’ என்கிற வசனம் சமூக வலைதலங்களில் மிகவும் பிரபலம். அந்த வசனத்தை வைத்து பல மீம்ஸ்கள் வலம் வந்த வண்ணம் இருக்கும். முற்போக்குச் சிந்தனையாளரான மாரிமுத்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடத்தைப் பற்றி பேசிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.
இவர் தற்போது இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்நிலையில் திரையுலகத்தினர் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர் மகன் அகிலன் கூறுகையில், ‘அப்பா மாரிமுத்து காலை 8.30 மணிக்கு இறந்தார். 25 ஆண்டாக சின்னத்திரையில் நடிக்கிறார். காலையில் இருந்து நிறைய பேர் வருகை தந்தார்கள். நன்றி. நாளை காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் இறுதி மரியாதைக்கு கொண்டு செல்ல உள்ளோம்.
அப்பாவுக்கு சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது அவரது மறைவு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் 5.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, சாலை வழியாக தேனிக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். நாளை காலை 10.30 மணிக்கு அடக்கம் செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க:"மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!