ETV Bharat / entertainment

"மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 4:14 PM IST

Actor marimuthu death: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் சமூக தலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் மாரிமுத்து உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதவி இயக்குநராக தனது திரை வாழ்வை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் மாரிமுத்து. மாரிமுத்துவை வெள்ளித்திரையில் இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் மாரிமுத்து.

ஆதி குணசேகரன் என எதிர்மறை கதாபாத்திரத்தில் மாரிமுத்து பேசும் ’இந்தாம்மா... ஏய்’ என்கிற வசனம் சமூக வலைதலங்களில் மிகவும் பிரபலம். அந்த வசனத்தை வைத்து பல மீம்ஸ்கள் வலம் வணந்தது. முற்போக்கு சிந்தனையாளரான மாரிமுத்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடத்தை பற்றி பேசிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

இவர் தற்போது இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், மாரிமுத்து நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்நிலையில் மாரிமுத்து மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர், அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என கூறியுள்ளார்.

மாரிமுத்து உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில் “இயக்குனர்,நடிகர் மற்றும் இயல்பான மனிதர் மாரிமுத்து. நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இழப்பு என்னுடைய பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு இயக்குனருக்கு ஒரு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்று அவர் புரிந்தவர். நடிப்புகளை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர்.

இயக்குநராக இரண்டு படம் எடுத்து முடித்த பிறகு பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க வந்தார். ஒரு இயக்குனரோட தேவையை புரிந்து கொண்டு, என்னுடைய அரசியலை புரிந்து கொண்டு, இந்த படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். அது மறக்க முடியாத அனுபவம். அவர் இறப்பு எல்லாருக்கும் பெரும் துயரத்தை உண்டாக்கி விட்டது.

பரியேறும் பெருமாள் படத்தில் வசனமாக இல்லாமல் எமோஷனலாக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். அப்போது நீங்கள் சொன்ன அத்தனையும் வசனமாக வைத்து விடுங்கள் என்று சொன்னார். அப்போது தான் எமோஷன் ரசிகர்களுக்கு போய் சேரும் என்றார்.

அவர் சொன்னது ஏற்றுக்கொண்டு டயலாக்காக வைத்தேன் அதன் பிறகு தான் தெரிந்தது அதனுடைய அர்த்தம். நல்ல அரசியல் சமுதாயத்தை விரும்பக் கூடிய நல்ல மனிதரை இழந்து விட்டோம் நிறைய நகைச்சுவையாக பேசுவார். அவருடைய பேச்சில் என்னுடன் முரண்பட்டிருக்கிறார் இது போன்று பேசக்கூடாது என்று நான் பேசி இருக்கிறேன். நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் கூட நான் சொல்லக்கூடிய விஷயங்களை உள் வாங்கிக்கொண்டு ஒத்துக் கொண்டுள்ளார்.

கர்ணன், மாமன்னன் படங்களில் இல்லாதது பற்றி செல்லமாக சண்டை போட்டிருக்கிறார். நிச்சயமாக அடுத்த படங்களில் நடிக்க பேசியிருந்தேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்” என கூறினார்

இதையும் படிங்க: நடிகர் மாரிமுத்து மறைவு - திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.