ETV Bharat / state

விண்ணை முட்டும் தக்காளி விலை.. தக்காளி இல்லாமல் சுவையாக சமைப்பது எப்படி?

author img

By

Published : Jul 27, 2023, 9:57 PM IST

தக்காளி இல்லாமல் சுவையாக சமைப்பது எப்படி?
தக்காளி இல்லாமல் சுவையாக சமைப்பது எப்படி?

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தக்காளி இன்றி சுவையாக சமைப்பது எப்படி என்ற தேடல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தக்காளி இல்லாமல் சமைக்கும் சில ரெசிப்பிகள் குறித்து உங்களுக்காக...

சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஜூன் மாத கடைசி வாரத்தில் இருந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேசங்களில் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீர் விலையேற்ற‌த்தால் த‌க்காளிக‌ளில் செய்ய‌ப்ப‌டும் உணவுகளுக்கு திண்டாட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. "தங்கம் கூட வாங்கிடலாம் போல, ஆனால் இந்த தக்காளியை வாங்க முடியல" என்றும் “தக்காளிக்கு இது குரு பார்வை காலம்” என்பன உள்ளிட்டப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க தக்காளி விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு சிலர் கூகுளில் தக்காளி இல்லாமல் சுவையான குழம்பு செய்வது எப்படி? தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி? என தேடத் தொடங்கியுள்ளனர். இதனால் 'தக்காளி இல்லாமல்' என்ற வார்த்தை கூகுளில் அதிக தேடுதல் இடத்தை பிடித்துள்ளது.

சமையலில் தக்காளி Must(மிக அவசியம்) என்று தான் பல உணவுகள் இருக்கின்றது. ஆனால் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியுமா? ஆம் முடியுமே!... உங்களுக்காக சில ரெசிப்பிகள் இதோ...

தக்காளி இல்லாத தக்காளி சட்னி
தக்காளி இல்லாத தக்காளி சட்னி

தக்காளி இல்லாத தக்காளி சட்னி: சிறிதளவு வெங்காயம் , பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை ஊற்றி தாளித்தால் தக்காளி இல்லாமலேயே சுவையான சட்னி ரெடி...

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-07-2023/19113364_4.jpg
தக்காளி இல்லாத ரசம்

தக்காளி இல்லாத ரசம்: முதலில் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின் நன்கு கரைத்து, வடி கட்டிக்கொள்ளவும். பின் மிளகு, பூண்டு, சீரகத்தை அரைத்து அதனை கரைத்த புளி கரைசலில் மஞ்சள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் தேவையான அளவு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். அடுத்ததாக கரைத்த புளி கரைசலை அதில் ஊற்றவும், பின் நுரை பொங்கி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தட்டுப்போட்டு மூடி விடுங்கள். அவ்வளவுதான் தக்காளியே இல்லாமல் சுவையான ரசம் தயார்.

சாம்பார்
சாம்பார்

சாம்பார்: ஊற வைத்து கரைத்து எடுத்த புளியை ஒரு கடாயில் சேர்த்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து, தட்டுப்போட்டு மூடி கொதிக்க வையுங்கள். பின் குக்கரில் வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டு, மீண்டும் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்ததும் இறுதியாக தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி, கொதித்தபின் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வுளவு தான் இனி தக்காளி இல்லாமல் சுவையான சாம்பார் ரெடி.

வத்தக் குழம்பு
வத்தக் குழம்பு

வத்தக் குழம்பு : மிளகு , துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், தனியா, வரமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் சுண்டைக்காய் வத்தல், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக புளி கரைசலை ஊற்றுங்கள். பின் அரைத்த பொடியை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் வத்தக்குழம்பு தயார்.

வெஜிடபிள் குருமா
வெஜிடபிள் குருமா

வெஜிடபிள் குருமா : மிக்ஸி ஜாரில் புதினா மற்றும் தயிர் சேர்த்து நன்று அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கலந்துவிட்டு, காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

பின்னர் அரைத்த புதினா விழுதையும் சேர்த்து கலந்துவிட்டு சுமார் 5 நிமிடம் கொதிக்க வையுங்கள். இதற்கிடையே தேங்காய், உடைத்த கடலை, சோம்பு மற்றும் முந்திரி சேர்த்து மைய அரைத்து, அதையும் கடாயில் ஊற்றி கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இறுதியாக கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் குருமா தயார்.

இதைப்படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே...!

இதையும் படிங்க: தெலங்கானாவில் அடுத்தடுத்து காத்திருக்கும் கனமழை.. மழை நேரத்தில் துணியை காய வைப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.