தூங்கவிடாமல் தொந்தரவு: நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபர் கைது

author img

By

Published : Jul 31, 2022, 9:22 PM IST

தூங்கவிடாமல் தொந்தரவு செய்த நண்பனை தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தூங்கிய நண்பன்..!

சென்னையில் தன்னைத் தூங்கவிடாமல் செய்த நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (40). இவர் அதே பகுதியில் உள்ள சாலையோரம் தங்கியிருந்து பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை செய்யும் இடத்தில் மதுரையைச் சேர்ந்த ராஜா (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சாலையோரம் வசிப்பவர்கள் என்பதால் விரைவிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

இருவரும் ஒன்றாக வேலை செய்வதும் வேலை முடிந்ததும் ஒன்றாக கஞ்சா புகைப்பது வழக்கம். நேற்று (ஜூலை 30) இரவும் இருவரும் ஒன்றாக கஞ்சா புகைத்துவிட்டு அதன்பின் ராஜா தூங்கச் சென்றுள்ளார். அப்போது சின்னதுரை ராஜாவை துங்கவிடாமல் தொந்தரவு செய்தபோது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாய்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சின்னத்துரையின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அங்கேயே தூங்கி விட்டார். அதிகாலையில் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த நபரைப் பார்த்ததும் உடனே இதுகுறித்து பல்லாவரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு எந்த ஒரு சம்பந்தமும் இன்றி தூங்கிக் கொண்டிருந்த குற்றவாளியைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கவிடாமல் தொந்தரவு செய்த நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இளைஞர் வெட்டிப்படுகொலை; 6 பேர் கொண்ட கும்பலுக்குப் போலீசார் வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.