ETV Bharat / state

மருத்துவப் படிப்பில் காலியிடங்கள்: கலந்தாய்வு முறையில் மாற்றம் தேவை!

author img

By

Published : Jan 5, 2023, 10:21 PM IST

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் காலியிடங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு கலந்தாய்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என டெக்னோகிரேட் இந்தியா காலேஜ் பைன்டர் நிறுவனத்தின் நிறுவனரும் கல்வியாளருமான நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு காலியிடங்கள்: கலந்தாய்வு முறையில் மாற்றம் தேவை!
மருத்துவ படிப்பு காலியிடங்கள்: கலந்தாய்வு முறையில் மாற்றம் தேவை!

மருத்துவப் படிப்பில் காலியிடங்கள்: கலந்தாய்வு முறையில் மாற்றம் தேவை!

சென்னை: மருத்துவப்படிப்பில் காலியிடங்கள் ஏற்படுவதால், அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையை மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்துகிறது.

நீட் தேர்விற்குப் பின்னரும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்த இடங்கள் 2020 - 21-ம் கல்வியாண்டு வரையில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டு நிரப்பப்பட்டது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இல்லாமல் அரசு மருத்துவக்கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் படி, மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தாலும், தேசிய மருத்துவக் கலந்தாய்வு குழு தான் நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் அக்டோபர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 29-ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு முடிந்த பின்னரும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 847 இடங்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 1 இடங்கள் என 6 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

முதுகலை மருத்துவப்படிப்பிற்கான 2022 - 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் அதிகளவில் காலியாக இருந்ததால், சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வு 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த கலந்தாய்வில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ, டிஎன்பி ஆகிய படிப்புகளில் 2,244 இடங்களும், 62 எம்டிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர விரும்பமுள்ளவர்கள் 50 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், இடங்களைத் தேர்வு செய்த பின்னர் சேரவில்லை என்றால் முதுகலைப் படிப்பிற்கான நீட் தேர்வு 2023 எழுதுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, "மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

மத்திய அரசின் இந்த புதிய விதி தான் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்திருக்கிறது. 2022 - 23ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நிறைவடைந்து விட்ட நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 1 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப ஒப்படைக்கப்படாது என்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1 மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். 1980-களின் தொடக்கத்தில் அகில இந்திய ஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது பல மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தான் அகில இந்திய ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தேவை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெக்னோகிரேட் இந்தியா காலேஜ் பைன்டர் (Technocrates India college finder) நிறுவனத்தின் நிறுவனரும், கல்வியாளருமான நெடுஞ்செழியன் கூறும்போது, "அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இருப்பதற்கு மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடத்தும் முறை தான். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்யும் மாணவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு யோசிப்பார்கள். ஆனால், வட இந்திய மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடத்தை தேர்வு செய்தால் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியாது.

எனவே, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்த பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடத்தில் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை யாரும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வினை ஆன்லைன் மூலம் நடத்துவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, அவர்களை நேரடியாக அழைத்து கலந்தாய்வினை நடத்த வேண்டும். மேலும் ஒற்றைச் சாளர முறையில் நேரடி கலந்தாய்வினை நடத்தாமல் இருந்தால் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் காலிப்பணியிடம் இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் மாணவர்கள் சேர்க்கை குழப்பமாகவே இருக்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தாலும் மாணவரின் வறுமையால் சேராமல் இடத்தை விட்டுக் கொடுக்கின்றனர்.

நீட் தேர்வினை ரத்து செய்யமாட்டார்கள். அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 6 இடங்கள் காலியாக இருக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தால், மாநில அரசே நிரப்பிக் கொள்ளலாம் என கேட்க வேண்டும். மேலும் கலந்தாய்வின்போது ஒரு கல்லூரியில் இடம் காலியானால், அந்த இடம் தரவரிசைப்படி வேறு மாணவருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான முறையைக் கொண்டு வர முடியும்.

மாணவர்கள் எதிர்காலத்தைக் கருதியும், நீட் தேர்விற்கான நோக்கத்தில் சமசரம் செய்து கொள்வதையும், இடங்கள் காலியாவதையும் காரணமாக காண்பித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதைக் கேட்கலாம். இதற்கு முன்னர் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தது கிடையாது.

மாநில அரசின் இடத்தை நிரப்புவதற்கு கேட்கலாம். ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு தெரியாமல் உள்ளதால் தான் இடங்கள் காலியாக இருக்கிறது. அரசு அதிகாரிகள் நகர்ப்புறங்களை கணக்கில் கொண்டு யோசிக்கின்றனர். முதல் தலைமுறை மாணவர்களையோ, கிராமப்புற மாணவர்களையோ யோசிப்பது இல்லை. எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதை கொண்டு வருவதற்கு ஏற்ப, கலந்தாய்வில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் போது தன்னம்பிக்கை இல்லாமலும், உலக அறிவு இல்லாமல் இருப்பதாலும், படித்ததை விட வேறு எதுவும் தெரியாமல் வேறு மாநிலங்களுக்குச் செல்வதற்கு யோசிக்கின்றனர். இது போன்ற காரணங்களால் தயக்கம் காட்டுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.