ETV Bharat / state

போலி ஆவணங்கள் மூலம் பணமோசடி வழக்கு; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

author img

By

Published : Oct 6, 2022, 10:21 PM IST

போலி ஆவணங்கள் மூலம் பணமோசடி வழக்கு; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
போலி ஆவணங்கள் மூலம் பணமோசடி வழக்கு; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

மும்பை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை மோசடி செய்து எடுக்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக்கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்துவிட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.

இதைத்தெரிந்து கொண்ட, ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர், அத்தொகையை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய முடிவு செய்துள்ளார். இந்தப் பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கைத்தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியா அனுப்பி வைத்தனர். இந்தியா வந்த அவர், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர். ஆனால், போலி பாஸ்போர்ட் வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் சிக்கினர். பின், அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அரசுத்தரப்பு அறிக்கையை ஏற்று, மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து, தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கக்கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர், கடந்த மார்ச் 29ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அரவிந்த் சாமி நடித்த "ரெண்டகம்" படத்தை வெளியிடத்தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.