ETV Bharat / state

69வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் போட்டியில் மல்லுக்கட்டும் தனுஷ், சிம்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 12:44 PM IST

69வது தேசிய விருது
69வது தேசிய விருது

69 National Film Award: 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பெயர் பட்டியல் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.

சென்னை: தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடித்த கர்ணன், சூர்யாவின் ஜெய்பீம், பா‌.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், மாநாடு உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக கர்ணன், ஜெய்பீம், சார்பட்டா படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல் கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை அள்ளியது. 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யா, இம்முறை ஜெய் பீம் படத்திற்காக அவ்விருதை மீண்டும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதே பட்டியலில் தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

அதேபோல் சிறந்த பின்னணி இசைக்காக அனிருத்திற்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் இசைக்காக அவருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்தாண்டு சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தியதைப் போல், இந்த ஆண்டு தேசிய விருதுகளில் அவரின் ஜெய் பீம் திரைப்படம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.சிறந்த இயக்குனர்களுக்கான போட்டியில் த.செ.ஞானவேல், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் ஆகியோரும் உள்ளதால் இயக்குநர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

தெலுங்கு திரையுலகத்தை பொறுத்தவரையில் புஷ்பா திரைப்படம் போட்டியில் இருக்கலாம் .ஹிந்தியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு வெளியான சூர்யவன்ஷி மற்றும் 83 ஆகிய இரண்டு திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு கூடுதல் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. விரைவில் விடாமுயற்சி படபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.