ETV Bharat / state

64 years of Kamal-உலகம் வியக்கும் உன்னத கலைஞன் : 64வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் கமல்ஹாசன்!

author img

By

Published : Aug 12, 2023, 12:56 PM IST

Updated : Aug 12, 2023, 3:34 PM IST

கமல்ஹாசன்
64 Years of Kamal Haasan

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமான கமல்ஹாசன் இன்று கலைஞானியாகவும், இந்திய சினிமாவின் அடையாளமாகவும் காணப்படுகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் திரையுலகில் இன்று 64 ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்.

சென்னை: 1960ஆம் ஆண்டு இயக்குநர் ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளியானது களத்தூர் கண்ணம்மா திரைப்படம். இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, டி‌.எஸ்.பாலையா, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்திருந்தது. அதே படத்தில் 5வயது சிறுவனாக ஒரு பையன் அறிமுகமாகிறான்.

தமிழ் சினிமாவின் பொற்காலமாக திகழ்ந்த அந்த காலகட்டத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது வரையிலும் சிறந்த படமாக விளங்குகிறது. தனது மழலை மாறாத குரலில் ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று பாட்டுப் பாடி படம் பார்த்தவர் எல்லோரது மனதிலும் குடிபுகுந்தான் அந்த பையன். அதுமட்டுமின்றி தனது சிறப்பான நடிப்பால் முதல் படத்திலேயே ஜனாதிபதி விருது பெற்றார். அந்த பையன் தான் இன்று உலக சினிமாவே உயர்ந்து பார்க்கும் உலக நாயகன் கமல்ஹாசன். இன்றுடன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 63ஆண்டுகள் நிறைவடைகிறது. கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் சினிமாவுக்காக அர்ப்பணித்த மகா கலைஞன் கமல்ஹாசன்.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலை தாகம் தற்போது வரை குறையவில்லை. விக்ரம் அவருக்கு 232வது படம். இதனை தொடர்ந்து இந்தியன் 2, எச்.வினோத், மணிரத்னம் படம் என வரிசை கட்டி நிற்கின்றன படங்கள். இந்த 63 ஆண்டுகளில் 6 மொழிகளில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்திய சினிமாவே வியக்கும் வண்ணம் பல படங்களை இயக்கியுள்ளார். பல பரிசோதனை முறைகளையும் மேற்கொண்டு அதில் பல முறை வெற்றி பெற்றுள்ளார். தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சிகளை தொடர்வதை நிறுத்துவதில்லை. சம்பாதித்த மொத்த பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்து வருபவர்.

இதையும் படிங்க: Jailer Review: ரசிகர்களுடன் படம் பார்த்த படக்குழுவினரின் ரியாக்‌ஷன்ஸ்!

தமிழ் சினிமாவிற்கு கமல்ஹாசன் பெற்றுத்தந்த மகுடங்கள் ஏராளம். இவரது கனவுப் படமான மருதநாயகம் மட்டும் வெளியாகி இருந்தால் தமிழ் சினிமா என்றால் என்ன என்பதை இந்த உலகம் கண்டு வியந்திருக்கும். இன்னும் தாமதமாகிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அது உயிர் பெறும். அந்த நம்பிக்கை கமலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் உண்டு.

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர் கமல்ஹாசன். பக்கம் பக்கமாக பேசி வந்த தமிழ் சினிமாவில் பேசாமலேயே பேசும் படம் என்ற ஒன்றை எடுத்து வியக்க வைத்தார். ஹாலிவுட்டில் பிறக்க வேண்டிய உன்னை தமிழ் மண் பெற்றெடுத்து எங்கள் பாக்கியம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாயகன், மூன்றாம் பிறை, தேவர் மகன், இந்தியன் என நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

உண்மையான சினிமா ரசிகர்களை கமல்ஹாசன் பெற்றிருந்தார். அதுவே அவரது எல்லா புது முயற்சிகளுக்கும் உந்துதலாக இருந்தது எனலாம். பள்ளிப் படிப்பை தாண்டாத கமல்ஹாசன் பல மொழிகளில் புலமை‌ பெற்றவர். சினிமா மூலம் அவர் பெற்ற அனுபவ பாடங்கள் ஏராளம். அதுமட்டுமின்றி கமல் ஒரு தீர்க்கதரிசி என்பதும் பலமுறை நிரூபணமாகியுள்ளது.

தனது அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றிய இவரது வசனம் அப்போது யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. ஆனால் சுனாமி வந்தபிறகு கமல் யார் என்று மக்களுக்கு தெரிந்தது. தாலிபன்கள் பற்றி விஸ்வரூபம் படத்தில் சொல்லியிருப்பார். எபோலா வைரஸ் பற்றி தசாவதாரம் படத்தில் சொல்லியிருப்பார். சிட் ஃபண்ட் மோசடி குறித்து மகாநதி படத்தில் பேசியிருப்பார்.

அதேபோல் தனது ஆளவந்தான் படத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 600க்கும்‌ மேற்பட்ட பிரின்ட் போட்டார். அதிக நாள் ஓடி சாதனை படைப்பதை விட அதிக திரையரங்குகளில் ஓடி வசூல் எடுத்துவிட வேண்டும் என்று இப்போது ஒரே படத்தை தமிழகத்தில் உள்ள எல்லா தியேட்டரிலும் படத்தை ரிலீஸ் செய்கிறார்களே அதற்கு விதை கமல் போட்டது.

அதேபோல் பல்வேறு தொழில் நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் கமல் தான். குணா படத்தை முதல் முதலில் ஸ்டெடி கேமராவில் எடுத்தார். குருதிப்புனல் படத்தில் DTS சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் படம் ஹே ராம். மேக்கப் குறித்து அனைத்தும் கமலுக்கு அத்துப்படி. இதற்காக அமெரிக்காவில் மேக்கப் குறித்து படித்து தெரிந்து கொண்டார். இவரது விருமாண்டி, ஹே ராம் போன்ற‌ படங்கள் திரைக்கதைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மைக்கல் மதன காமராஜன் படத்தை இப்போது நினைத்தாலும் யாராலும் எடுக்க முடியாது. எந்த வித தொழில்நுட்பமும் அதிகம் இல்லாத அந்த காலத்திலேயே இதுபோன்ற படங்களை எடுத்து மிரட்டியவர். தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து பிரமிக்க வைத்தார். இப்படி சினிமாவில் உள்ள அத்தனை கலைகளிலும் தேர்ச்சி பெற்று அதில் சாதனையும் படைத்த ஒரே சகலகலா வல்லவன் கமல்ஹாசன் மட்டுமே.

விக்ரம் படத்தின் மூலம் சுமார் ரூ.450 கோடி வசூல் செய்து இப்போது உள்ள நடிகர்களுக்கும் நான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்துள்ளார். இன்னும் சொல்லாமல் விடுபட்டவை ஏராளம். கமல்ஹாசன் இன்னும் பல வியத்தகு சாதனைகளை தமிழ் சினிமாவில் படைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான சினிமா ரசிகனின் ஆசை. வாழ்த்துகள் உலக நாயகன் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: Jailer Box office: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Last Updated :Aug 12, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.