ETV Bharat / state

செப்டம்பரில் காலாவதியாகும் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் - மா. சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jul 8, 2022, 5:12 PM IST

செப்டம்பரில் காலாவதியாகும் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: மா.சுப்பிரமணியன் தகவல்
செப்டம்பரில் காலாவதியாகும் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: மா.சுப்பிரமணியன் தகவல்

செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை இயக்குநரகத்தில் இருந்து ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொசுக்களால் பரவும் நோய்கள் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழ்நாடு அரசு கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் 2ஆயிரத்து 866 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், ரத்தம் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 21ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு புகை இயந்திரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 நபர்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லாத நிலை உள்ளது. மலேரியா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, ராமநாதபுரம், தர்மபுரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை உள்ளன. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு அரசு யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இதுவரை 8ஆயிரத்து 23 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 13 நபர்கள் இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் போடப்படுகிறது.

9 முதல் 12 மாத குழந்தைகளுக்கு தவணை தடுப்பூசியும், 16 முதல் 24 மாத குழந்தைகளுக்கு 2 ஆவது தவணை தடுப்பூசிளும் போடப்படுகிறது. இந்தப் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது. மழை பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்களின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 78லட்சத்து 78ஆயிரத்து 980 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. செப்டம்பர் 2022 அன்றுடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன.

எனவே, இந்த தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க ஒன்றிய அரசு 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி தனியார் கரோனா தடுப்பூசி மையத்தை தவிர்த்து, அரசு கரோனா தடுப்பூசி மையத்திலேயே இலவசமாக தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:காலரா நோய் பரவல்: தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.