ETV Bharat / state

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்கள் தமிழகம் வருகை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 7:13 PM IST

13-fishermens-return-tamilnadu-who-were-released-by-srilankan-court
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்கள் தமிழகம் வருகை..!

Tamilnadu Fishers : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 தமிழக மீனவர்கள் இன்று காலை விமான மூலம் சென்னைக்கு திரும்பினர்.

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களையும் கைது செய்தனர். அதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன் வலைகள், படகுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு, 13 தமிழக மீனவர்களையும் படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி இலங்கை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதங்கள் அனுப்பினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், 13 தமிழக மீனவர்களைக் கடந்த மாதம் 21ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு, விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் தூதரக அதிகாரிகள் 13 தமிழக மீனவர்களையும் தமிழ்நாட்டுக்கு விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால் அனைவருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள் அவசரக்கால சான்றிதழ்களை வழங்கினார்கள். அதோடு 13 மீனவர்களுக்கு இந்தியத் தூதரக அதிகாரிகளே விமான டிக்கெட்கள் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில், 13 மீனவர்கள் இலங்கையில் இருந்து இன்று (ஜன.09) ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த 13 மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் 13 மீனவா்களை, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப்பரான சூப்! ட்ரை பண்ணி பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.