ETV Bharat / state

பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை.. ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கொலைகளால் மக்கள் பீதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 11:22 AM IST

கொலை செய்யப்பட்ட எபினேசர்
கொலை செய்யப்பட்ட எபினேசர்

Rowdy Murder Case in Sriperumbudur: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி ஒருவரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசர் (வயது 25). இவர் நேற்று(செப். 5) காட்டூர் கூட்ரோடு வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில், சிகப்பு நிறக் கார் ஒன்று ஆட்டோவை லேசாக இடித்து, சாலையோரமாக தள்ளியதாக கூறப்படுகிறது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என எண்ணிய எபினேசர், ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடியதாக சொல்லப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு வீச்சு: அப்போது காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள், எபினேசர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதா சொல்லப்படுகிறது. அந்த வெடிகுண்டு வெடித்து எபினேசரின் வலது காலில் காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு அவரால் வேகமாகத் தப்பி ஓட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கொடூர கொலை: இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட அந்த மர்ம நபர்கள், வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் எபினேசரின் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர். சுமார் 50 இடங்களில் கொடூரமாக வெட்டு விழுந்ததாக போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் துடிதுடித்த எபினேசர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் தாங்கள் வந்த காரிலேயே ஏறி தப்பிச் சென்றனர்.

முதல் கட்ட விசாரணை: தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, எபினேசரின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த எபினேசர் திருமணம் முடிந்து திருமழிசை பகுதியில் வசித்து வந்து உள்ளார். இவர் மீது வெள்ளவேடு, பூந்தமல்லி, திருமழிசை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மணிகண்டன் என்பவரிடம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து, காட்டூர் கூட்ரோடு வழியாக திருமழிசையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் பொழுது தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் விசுவாசியாக எபினேசர் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

முன் விரோதம் காரணமா? ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டது போல் தன்னையும் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தை தன் சக நண்பர்களிடம் ஏற்கனவே எபினேசர் தெரிவித்து இருந்தாகவும், அது மட்டுமல்லாமல் வெள்ளவேடு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும், எபினேசருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகவும் போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜேஷ் மீது பத்து வழக்குகளுக்கு மேல் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ராஜேஷ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜேஷின் ஆட்கள் எபினேசரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதா? எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் பூந்தமல்லி, திருமழிசை பகுதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் எபினேசருடன் முன்பகை இருந்ததாக கூஉறப்படுகிறது. பூந்தமல்லியை சேர்ந்த ஆட்களும் எபினேசரை கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்படை போலீசார் விசாரணை: ராஜேஷின் அடியாட்கள் கொலை செய்திருப்பார்களா? அல்லது ஆற்காடு சுரேஷை கொலை செய்த கும்பல் கொலை செய்திருக்குமா? என்ற ரீதியில், நான்கு தனிப்படைகள் அடங்கிய குழுக்கள் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கிளாய் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ், பாஜக மாநில பட்டியலின பொருளாளர் பி.பி.ஜி.டி சங்கர் மற்றும் எச்சூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆல்பர்ட் என அண்மைக்காலமாக தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன. ஸ்ரீபெரும்புதூரில் மாதம் ஒரு நபர் வீதம் கொலை செய்யப்படுவது, அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திலேயே அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில், தொடர்ந்து கொலைகள் நடப்பது பொதுமக்கள் மத்தியில் காவல் துறை மீதான நம்பிக்கையை சீர்குழைக்கும் விதமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தததா பல்லடம் 4 பேர் படுகொலை விவகாரம்? - போலீசார் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.